தமிழ்ச் செல்வங்கள்- சொல் - 2
சொல்' என்பது "நெல்' எனப் பொருளுடையது என்று கண்டோம். சொல்லாகிய நெல்லின் அரிசியால் ஆக்கப்பட்டது "சொன்றி' என்றனர். பொதுமக்கள் "சோறு' என வழங்கினர். புலமையாளர்களும் சோறு என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
' சொல்' என்பது "நெல்' எனப் பொருளுடையது என்று கண்டோம். சொல்லாகிய நெல்லின் அரிசியால் ஆக்கப்பட்டது "சொன்றி' என்றனர். பொதுமக்கள் "சோறு' என வழங்கினர். புலமையாளர்களும் சோறு என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
யானைக்குத் தந்தம் இருப்பதை நாம் அறிவோம். தந்தம் என்பது அதன் கடைவாயில் அமைந்த கோரைப் பல்லே. யானை போலவே தொல் பழமையான நாளில் பன்றிக்கும் கோரைப் பல் இருந்தது என்று தொல்லியல் ஆய்வாளர் சொல்வர். அதனைப் "பன்றி' என்னும் பெயரே வெளிப்படுத்துகிறது. பல் - பன் - பன்றி. இதனோடு, சொல் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பார்த்தால்,
சொல் - சொன் - சொன்றி என்பது விளங்கும்.
Advertisement
நல் - நன் - நன்றி என்பதையும் காணலாம்.
பாண்டியன் நெடுஞ்செழியன், ""கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று'' என்றான்; வழக்காடிய கண்ணகியாரிடம்! கோறல் - கொல்லுதல். கொல்லுதல் "கோறல்' எனப்பட்டது. "கோறுதல்' என்பதும் அது. கொல் என்பதன் வழியே "கோறு' என்பது போல், சொல் என்பதன் வழியே "சோறு' அமைந்தது.
வரகரிசிச் சோறு. தினையரிசிச் சோறு, குதிரை வாலியரிசிச் சோறு, கம்பரிசிச் சோறு என்பவை வழக்கில் வந்தன. சோறு போல் தோற்றம் தரும் கள்ளி, கற்றாழை ஆகியவற்றின் உள்ளீடாகிய செதும்பு, சோறு எனவும் வழங்கப்பட்டது. கள்ளிச் சோறு, கற்றாழஞ் சோறு என்பவை சோறு போன்ற தோற்றத்தால் ஏற்பட்டவை.
சொல் வழியாக வந்த சொன்றி, சோறு என்பவை இன்று நேற்று வந்தவை அல்ல. நம் பழந்தமிழ் நூல்களில் பல்கால் இடம்பெற்ற சொற்களாகும்.
""நெல்லின் செவ்வவிழ்ச் சொன்றி''
(பெரும்பாண்-131)
"குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றி''
(மேலது-193)
""பல சொன்றி உண்டு'' (மதுரைக்-212-213)
""புன்புல வரகின் சொன்றி'' (புறம்-197)
""சோறுவாக்கிய கொழுங்கஞ்சி'' (பட்டினப்-44)
""சோறகு குமிசி'' (பெரும்பாண்-366)
""சோறிடு சாலை'' (மதுரைக் -395 நச்.)
""சோறுபடுக்கும் தீ'' (புறம்-20)
""ஏற்றுக உலையே ஆக்குக சோறே'' (புறம்-172)
சொன்றியும் சோறும் பாடு புகழ் பெற்ற பழநாள் சொற்கள் என்பது காண்க!