"தமிழ்த் தாத்தா'வின் பணிவு!
திண்டிவனத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொள்ள "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. வருகை தந்திருந்தார். திருமண மண்டபத்தில் ஒரே ஒரு விசுப்பலகைதான் இருந்தது.
திண்டிவனத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொள்ள "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. வருகை தந்திருந்தார். திருமண மண்டபத்தில் ஒரே ஒரு விசுப்பலகைதான் இருந்தது. அறிஞர் பலரும் "தமிழ்த் தாத்தா'வை அப்பலகை மீது அமரச் செய்து, அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்த உ.வே.சா., ""அந்தப் பாட்டு, அந்தப் பாட்டு'' எனக் கூறி நினைவுபடுத்த முயன்றார். உடனே அருகிலிருந்த இருமொழிப் புலவர் ஒருவர், உ.வே.சா. சொல்ல விரும்பிய அப் பாடலைக் கூறினார். பாடல் இதுதான்:
ஆக்கம் பெரியார் சிறியார் இடைப்பட்ட
மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின்
மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல
வலி தன்றே தாழும் துலைக்கு.
(குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம்-பா.17)
சிறுமையையும் பெருமையையும் கூறும் இப்பாடலின் திரண்ட கருத்தாவது: "துலாக்கோலின் (தராசு) தட்டுகள் இரண்டில் பளுவுள்ளது தாழும்; பளுவில்லாதது மேலே மேலே உயர்ந்து செல்லும். அதுபோல, மிகச்சிறந்த பெரியோர், சிறியோரிடம் உண்டான வரம்பு கடந்த நடத்தையைக் (ஒழுக்கம்) கண்டால் அவர்களுக்கு மிகவும் தாழ்ந்து நடப்பர்' என்பதாம்.
இங்கு உ.வே.சா., சொல்ல வந்த கருத்து என்னவெனில், "அறிவில் குறைந்த யான் மேலே அமர்ந்திருக்கிறேன். அறிவு நிரம்பிய நீங்கள் தாழ்ந்த தரையில் அமர்ந்திருக்கிறீர்கள்' என்பதாம். "தமிழ்த் தாத்தா' வின் அடக்க உணர்வை அறிந்து அனைவரும் அகம் மகிழ்ந்தனராம்.