தமிழ்ச் செல்வங்கள்: உலகம் -1
முற்காலத்தில் எழுதத் தொடங்கும் போதே உலகத்தை எண்ணினர். "உ' எனத் தொடங்கினர். உடல், உள்ளம், உள்ளுள், உயிர், உலகு, உய்த்தல், உய்வு என்பவற்றின் முதலான "உ' என்பதில் ஊன்றி நின்றனர்.
""உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு'' என்று தொடங்கியது திருமுருகாற்றுப்படை (1-2). அதற்கு முந்தை முப்பால் முதற்பாடல்,
Advertisement
""அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு''
என்று தொடங்கியது. ""உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்'' (பெரியபுராணம்); ""உலகம் யாவையும்'' (கம்பராமாயணம்) எனப் பின்னூல்களும் தொடர்ந்தன!
"உலகம்' என்னும் சொல், ஆழ்ந்து அகன்ற அறிவியல் சொல். உல்-உலம்-உலகு-உலகம் என விரிந்தது. உலா, உலாவல் எனவும் ஆயது. பழநாளில் சிற்றூர்கள் தோறும் ஊர்ப் பொதுமன்றத்தில் உருண்டைக் கல்கள் சிறிது, அதனிற்பெரிது, மிகப்பெரிது என மூன்றும் கிடைக்கும். அவற்றுக்கு இளவட்டக்கல் என்பது பெயர். வெளியூரில் இருந்து, பெண் கேட்டு வரும் மாப்பிள்ளை, ஒவ்வொரு கல்லாக மூன்று கல்களையும் முழங்காலில், வயிற்றில், மார்பில், தோளில் படாமல் தூக்கி எறிய வேண்டும். மூன்று கல்களையும் அப்படித் தூக்கினால் மணத்தகுதி உண்டு என்று தீர்மானித்தனர். அந்தக் கல்லுக்கு "உலம்' என்பது பெயர். சிந்தாமணியார் காலத்திலே அவ்வழக்கம் இருந்ததை,
மட்ட விழ்ந்த தாரினான் இம்மா நகர்க்குள் ஆயிரர்
தொட்டெ டுக்க லாவு லம்ஓர் தோளில்
-ஏந்தி ஆடினான்
என்கிறார் (690). "உலம்' உருண்டைக் கல் (உ.வே.சா. அடிக்குறிப்பு) உலண்டு - உருண்டை. உலண்டுக்கூடு, பட்டுப்புழுக் கூடு. உருண்டையானது. ""உலண்டின் நிறன் ஒக்கும் புன்குருக்கண்'' கலித்தொகை 101. "உலண்டு, பட்டுப்பூச்சி என்பர்' இளவழகனார் குறிப்புரை. உலகம் - உருண்டையானது. "உலா'வுதல், "உலா'த்துதல் மக்கள் வழக்கம். ஊருலா, தேருலா, நகருலா நடைமுறைக் காட்சிகள்.
உலகம் உருண்டையானது என்பதை விளக்க ஒரு சொல் "அண்டம்'. அண்டம் - முட்டை. அண்டம் முட்டை வடிவினது. உருண்டை என்பதன் "ரு' போய்விட்டால், உண்டை. ""உண்டைப் பிறக்கம் அண்டம்'' திருவாசகம் திருவண்டப்பகுதி.
உண்டை, வில்லுண்டை, கவண் உண்டை. உண்டைக்கட்டி அறியாதவை இல்லையே! கோல்பூச்சி என்பது பட்டுப்பூச்சி. கோல் எழுத்து, வட்டெழுத்து, கோலம், வளைய வளையப் போடல். கோல-கோலி = உருண்டை. கோள்கள் உருண்டை. ஒன்பான் கோள். கோளம்-உருண்டை. உலகம் உருண்டையானது; உலா வருவது என்பது
கண்டோம். ""உலகம், கொய்யாப் பிஞ்சு'' - பாரதிதாசனார்.
தொடர்வோம்...