முகப்பு
தமிழ்மணி

உ.வே.சா.வும் பெரியபுராண பாடமும்!

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாற்றை மாணவராகிய உ.வே. சாமிநாதய்யர் இரண்டு பாகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

Updated On : 12 ஏப்ரல், 2015 at 2:30 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:43 AM

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாற்றை மாணவராகிய உ.வே. சாமிநாதய்யர் இரண்டு பாகமாக எழுதி வெளியிட்டுள்ளார். உ.வே. சாமிநாதய்யர் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு மேலாகப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டதாகச் சொல்வார்கள்.

ஆங்கிரச வருடம் கார்த்திகை மாதத்தில் ஒருநாள் பெரியபுராணப் பாடம் தொடங்கப் பெற்றது. பெரியபுராணத்துள் கண்ணப்ப நாயனார் புராணத்தைப் பாடம் கேட்டு வரும் நாளில் உ.வே.சா.விற்குக் காய்ச்சலும் பின்பு பெரியம்மையும் வந்துள்ளது. ஆதலால், உ.வே.சா.வின் தாய்வழிப் பாட்டி ஊராகிய சூரிய முலைக்குச் சென்று தங்கிவிட்டார்.

பெரியபுராணம் பாடம் நடத்தும் வேளையில் உ.வே.சாவிற்கு உடம்புநோய் வந்துவிட்டதே என்ற கவலையில் பிள்ளையவர்கள் காணப்பட்டார். இவரின் வருத்தத்தை நன்குணர்ந்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர், "உ.வே.சா. உடல்தேறிய பின்பு பெரிய புராணப் பாடத்தைத் தொடரலாம்' எனக் கூறிவிட்டார்.

Advertisement

உ.வே.சா. உடம்பு நலமடைந்த பிறகு திருவாவடுதுறைக்குத் திரும்பியவுடன் ஆசிரியராகிய பிள்ளையவர்களைச் காணச்சென்றார். அப்போது அம்மை நோயால் தனது உடம்பில் உண்டாகிய வடுக்களைப் பார்த்தால் பிள்ளையவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்றெண்ணிய உ.வே.சா., அம்மை வடுக்கள் மீது விபூதியைப் பூசிச் சென்றாராம்.

உ.வே.சா.வைப் பார்த்த பிள்ளையவர்கள். அவரை அருகில் அழைத்து உட்கார வைத்து, ""அம்மை வடுக்கள் புலப்படாதபடி விபூதி கவசம் தரித்திருக்கிறீர் போலும், அடையாளம் தெரியவில்லையே... உம்முடைய ஞாபகமாகவேயிருந்தேன். நீர் இல்லாமையினால் பெரிய புராணப் பாடத்தை நிறுத்தி வைக்கும்படி சந்நிதானம் கட்டளையிட்டது. அதனால் அது நடைபெறவில்லை. இனிதான் நடைபெற வேண்டும்'' என்றாராம். அதன்பின் பெரிய புராணத்தின் எஞ்சிய பகுதி நடத்தப்பெற்றது.

உடம்பிலுள்ள அம்மை வடுக்களை ஆசிரியர் பார்த்தால் வருத்தப்படுவார் என்பதற்காக விபூதி பூசி மறைத்தலும், அவ்வாறு மறைத்ததைப் பிள்ளையவர்கள் உணர்ந்து வினவியதும் மறக்க முடியாத சுவையான நிகழ்வாகும். அக்காலத்தில் ஆசிரிய - மாணவ உள்ளங்கள் எப்படியிருந்தன என்பதை இந்நிகழ்சி வெளிப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சி, உ.வே.சா., வெளியிட்ட மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றின் இரண்டாம் பாகத்தில் (1934) உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.