புறநானூற்றில் எரிநட்சத்திரம் உமிழும் கனலின் அளவு
பங்குனி மாதத்தில் எரிநட்சத்திரம் (Shooting Star) விழுமாயின் அந்நாட்டு அரசனுக்குத் தீங்குண்டாகும் என்பது கணியக்கலை நூலின் கருத்தாகும்.
பங்குனி மாதத்தில் எரிநட்சத்திரம் (Shooting Star) விழுமாயின் அந்நாட்டு அரசனுக்குத் தீங்குண்டாகும் என்பது கணியக்கலை நூலின் கருத்தாகும். அக்கருத்தை மெய்ப்பிக்கப் புறநானூற்றில் கூடலூர்கிழார் பாடிய (229) பாடலைச் சான்றாகக் கொள்ளலாம். அப்பாடல், பங்குனி மாதத்தில் ஒருமீன் விழுந்ததன் பயனாக அந்நாட்டு அரசனான கோச்சேரமான் யானைக்கண்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்துவிட்டான் என்ற கருத்தை
வெளிப்படுத்துகிறது. அப்பாடலின் முக்கிய அடிகள் சில வருமாறு:
ஆடுஇயற் அழற் குட்டத்து
Advertisement
ஆரிருள் அரை இரவில்
... ... .... ...
பங்குனி உயர் அழுவத்து
... .... ....
அளக்கர்த் திணை விளக்காக,
... .... ....
ஒரு மீன் விழுந்தன்றால்
... ... .....
மேலோர் உலகம் எய்தினன் (புறம்.229)
வானத்திலிருந்து விழுந்த எரி நட்சத்திரத்தின் ஒளி முதலான தன்மைகளைக் குறிப்பிட விரும்பிய கூடலூர்கிழார்,
அளக்கர்த் திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே (229)
என்றவாறு குறிப்பிட்டுள்ளார். கடலால் சூழப்பட்ட பூமியில் விளக்காகப் பேரொளியுடன் தீப்பரக்கக் காற்றால் பிதிர்ந்து, கிளர்ந்து ஒரு எரிமீன் வானத்திலிருந்து கீழே விழுந்ததாகப் புலவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரன் இல்லாத இருண்ட இரவில் (12.30 மணி) பூமிக்கே விளக்காக மிகமிகப் பெரிய பேரொளியுடன் (Luminous) அம்மீன் விழுந்ததாகப் பாடலடிகள் உணர்த்துகின்றன. எரிநட்சத்திரம் உமிழ்ந்த கனலின் தன்மையை நேரில் கண்ட கூடலூர்கிழார் அச்செய்தியை உள்ளவாறு தெரிவித்துள்ளார்.
ம. மீனாட்சிசுந்தரம் என்பவர், "அறிக அறிவியல்' என்னும் திங்களிதழில் (திசம்பர் 1988 பக்.29) எரிமீன்கள் பற்றி கூறியுள்ள கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். ""எரிநட்சத்திரம் உமிழும் கனலின் வெப்பம் 7000ளி "சி' இருக்கக்கூடும் என்றும், இவை காட்டும் சோதியின் நீளம் 12 மைல் முதல் 15 மைல் வரை இருக்கலாம் என்றும் வானநூல் அறிஞர்கள் கருதுவதாக'' அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறப்பெற்ற கருத்துகளை நோக்கின், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புறநானூற்றுப் புலவரொருவர் எரிநட்சத்திரத்தின் தன்மைகளை நேரில் கண்டு ஒருவாறு கூறியுள்ளார் என்பதையும் அவரது வானியலறிவையும் அறிந்துகொள்ள முடிகிறது.