முகப்பு
தமிழ்மணி

தேன் + நெய் = நஞ்சு!

சுவைமிக்க பல பொருள்களைக் கலந்து உண்பது இன்பம் தரக்கூடியது. ஒப்பற்ற தன்மைக்கு உவமையாக அக்கலவையைக் கூறுவது சான்றோர் மரபு. "பாலும் தெளி தேனும்' (ஒளவையார்); "" நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து, பால் கலந்து'' (வள்ளலார்); ""பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி / வாலெயி ரூறிய நீர்'' (வள்ளுவர்); ""பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்'' (மணிவாசகர்);

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

சுவைமிக்க பல பொருள்களைக் கலந்து உண்பது இன்பம் தரக்கூடியது. ஒப்பற்ற தன்மைக்கு உவமையாக அக்கலவையைக் கூறுவது சான்றோர் மரபு. "பாலும் தெளி தேனும்' (ஒளவையார்); "" நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து, பால் கலந்து'' (வள்ளலார்); ""பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி / வாலெயி ரூறிய நீர்'' (வள்ளுவர்); ""பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்'' (மணிவாசகர்);

""புரையற்ற பாலுடன் நெய்கலந் தாற்போல்'' (திருமூலர்) இவ்வாறு பலரும் கூறியுள்ளனர்.

இவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி. தேனும் நெய்யும் கலந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ""கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போல்'' எனத் திருவாசகத்திலும் (1-46), ""நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி'' எனத் திருப்பாவையிலும், ""நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்'' எனத் திருமந்திரத்திலும் நெய் பாலுடன் கலந்து அருந்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது; தேனுடன் அன்று. தேனும் நெய்யும் கலந்து உண்ண வேண்டும் என்று ஏன் கூறப்படவில்லை என்பதை ஆய்வு செய்தால், ஓர் அறிவியல் உண்மை வெளிப்படுகிறது.

Advertisement

தேனையும் நெய்யையும் ஒரு குறிப்பிட்ட அளவில் கலந்தால் அது நஞ்சாக மாறும்; உண்பவர் உயிரைப் பறிக்கும். இந்த அறிவியல் உண்மை தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.

"யானைஇல் மன்னரைக் காண்டல் நனிஇன்னா

ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன்இன்னா

தேன்நெய் புளிப்பின் சுவைஇன்னா ஆங்கின்னா

கான்யாறு இடையிட்ட ஊர்''

என்னும் "இன்னா நாற்பது' பாடல் கூறுகிறது. தேனையும் நெய்யையும் கலந்து உண்டால், அச்சுவை துன்பத்தைத் தரும் என்பது இப்பாடலில் உள்ள ஓர் அறிவியல் மருத்துவக் குறிப்பு. இனி, உரையாசிரியர் பரிமேலழகரும் தேனும் நெய்யும் கலந்தால் அது நஞ்சாகும் என்று கூறியிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

""அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து'' (குறள்-944)

என்னும் குறளுக்கு அவர் எழுதிய உரையில், ""முறையே வாத பித்த ஐகலான் ஆய பகுதிக்கு அடாதவற்றைச் செய்வன் ஆதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் கால வேறுபாடுகளுள் ஒன்றற்காவது ஒன்றற்கு ஆகாமையும் தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சு ஆதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின் நோயும் மரணமும் வருதலின் "கடைப்பிடித்து' என்றார்'' என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற மருத்துவ அறிவியல் கருத்துகள் தமிழ் இலக்கியங்களில் நிறைய இருப்பது நம் முன்னோரின் அனுபவ அறிவைப் பறைசாற்றுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments