முகப்பு
தமிழ்மணி

தலைவர் சான்றோர் அல்லர்

தலைவன் பொருள் தேடத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். வினை முடித்துக் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறிச் சென்றான். கார்காலமும் வந்தது; ஆனால் தலைவன் வரவில்லை. இதுவரை பிரிவை ஒருவாறு பொறுத்திருந்த தலைவி, மேலும் பொறுக்க இயலாதவள் ஆனாள். தன் உயிர்த் தோழியிடம் தன் மன ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கிறாள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:39 AM
பகிர்:

தலைவன் பொருள் தேடத் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். வினை முடித்துக் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகத் தலைவியிடம் உறுதிபடக் கூறிச் சென்றான். கார்காலமும் வந்தது; ஆனால் தலைவன் வரவில்லை. இதுவரை பிரிவை ஒருவாறு பொறுத்திருந்த தலைவி, மேலும் பொறுக்க இயலாதவள் ஆனாள். தன் உயிர்த் தோழியிடம் தன் மன ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்கிறாள்.

"அன்புத் தோழியே! என் தலைவரின் பிரிவை எண்ணும் போதே என் உள்ளம் வேகின்றது. ஆயின் அவ்வாறு எண்ணாதிருக்கவும் என்னால் இயலவில்லை; என் காமமோ வான் அளவு ஓங்கி வருத்துக்கிறது; இந்நிலையில் என்னைப் பிரிந்து சென்ற "அவர்' - சான்றோர் அல்லர்' என வெகுண்டு உரைக்கிறாள்.

"உள்ளின் உள்ளம் வேமே

உள்ளா திருத்தல் எம் அளவைத் தன்றே

வான் தோய்வற்றே காமம்

சான்றோர் அல்லர் யாம் மரீ இயோரே' (குறுந்)

தலைவி, தலைவனைச் சான்றோர் அல்லர் என உளம் நொந்து கூறியதேன்? சான்றாண்மைக்குரிய இலக்கணமாக வள்ளுவர் கூறுவது,

"அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் பூன்றிய தூண்' (983)

என்பதாம். என்னிடம் அன்பு இருந்தால் அவர் பிரிந்து செல்லார்; பழிக்கு நாணும் இயல்பும், எனக்கே உதவாதவர் பிறர்க்கு எங்ஙனம் உதவுவார்? எனவே ஒப்புரவும், கருணையும் இல்லாதவர். கார்காலம் தொடங்கியதும் வருவேன் என்ற சொல்லின்படி வராததால் அவரிடம் வாய்மையும் இல்லை. எனவே, அவர் "சான்றோர் அல்லர்' என்று பழித்துக் கூறினாள் என்க.

-இரா.வ.கமலக்கண்ணன்

முழு கட்டுரையைப் படிக்க →