முகப்பு
தமிழ்மணி

கலிங்கத்துப்பரணி கூறாத கல்வெட்டுச் செய்தி!

தமிழ் மொழியில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலிங்கத்துப்பரணி. இது, முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்க வெற்றியை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட நூல். இன்றைய ஒடிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியும் ஆந்திர மாநிலத்தின் வடகோடிப் பகுதியும் இணைந்த நிலப்பரப்பே "கலிங்க நாடு' என்பது ஆய்வாளர்களின் கருத்து.

Updated On : 14 பிப்ரவரி, 2016 at 1:00 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:01 PM

தமிழ் மொழியில் தோன்றிய சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலிங்கத்துப்பரணி. இது, முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்க வெற்றியை மையமாகக்கொண்டு இயற்றப்பட்ட நூல். இன்றைய ஒடிசா மாநிலத்தின் தெற்குப் பகுதியும் ஆந்திர மாநிலத்தின் வடகோடிப் பகுதியும் இணைந்த நிலப்பரப்பே "கலிங்க நாடு' என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கலிங்க அரசனை வெற்றி கொண்டதற்கு அடையாளமாக அப்பகுதியில் இருந்த ஒரு கடற்கரை நகரைக் "குலோத்துங்க சோழப் பட்டணம்' என்று (கல்வெட்டில் உள்ளதுபோல்) கருணாகரத் தொண்டைமான் (குலோத்துங்கனின் படைத் தளபதி) பெயர் மாற்றம் செய்தான். இச்செய்தி கலிங்கத்துப்பரணி நூலில் கிடையாது. அந்நகரமே இன்றைய விசாகப்பட்டினம். புகழ்பெற்ற வரலாற்றுப் பேராசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவப் பண்டாரத்தார், டாக்டர் சி.மீனாட்சி, வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் போன்றோர் எழுதிய சோழர் கால வரலாற்று நூல்களில் இச்செய்தி பதிவு செய்யப்படவில்லை.

இப்பெயர் மாற்றத்தை உள்ளடக்கிய இரண்டு தமிழ்க் கல்வெட்டுகளைத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் (நர்ன்ற்ட் ஐய்க்ண்ஹய் ஐய்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய்ள்) என்ற தலைப்பில் 1909ஆம் ஆண்டிலேயே மத்திய அரசின் தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தியுள்ளனர்.

Advertisement

சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தொல்லியல் துறை அலுவலகத்தில் உள்ள புத்தகத்தில் இவ்விரு கல்வெட்டுச் செய்திகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் செம்மைப்படுத்தியுள்ளனர். இவ்விரு கல்வெட்டுகளில் ஒன்று (6 வரிகள்) விசாகப்பட்டினத்தில் (விவேகானந்தர் தெரு மத்திய கடற்கரை அருங்காட்சியகம்) உள்ள அருங்காட்சியகத்தில் திறந்தவெளியில் ஒரு மரத்தின் அடியில் உள்ளது. ஆறு வரியுள்ள இக்கல்வெட்டின் ஆறாவது வரியில்தான் "குலோத்துங்க சோழப்பட்டணம்' } பற்றிய குறிப்பு உள்ளது. இந்த வரியே, கீழ்க்காணும் கல்வெட்டில் ஆங்கிலத்தில் உள்ளது.

மற்றொரு கல்வெட்டு (24 வரிகள்) தற்சமயம் எங்குள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், இது எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டது என்பதை மட்டும் மத்திய தொல்லியல் துறையினர் தம்முடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர். கலிங்கத்து

பரணியில் காட்டப்படாத இக்கல்வெட்டுச் செய்தி தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் புதிய வரவாகும்.

இக்கல்வெட்டு மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் விசாகப்பட்டினம் - குலோத்துங்க சோழப்பட்டணமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

-முனைவர் சீனிவாச கண்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.