முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்

நீர்தான் நீளப் பேசுகிறேன்; என் இயற்கை அஃது ஆதலால்! நான் அருவியாய்க் கல்லென வீழ்ந்த இடத்தைப் பார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:23 PM
பகிர்:

நீர்தான் நீளப் பேசுகிறேன்; என் இயற்கை அஃது ஆதலால்! நான் அருவியாய்க் கல்லென வீழ்ந்த இடத்தைப் பார். குழியாக இருக்கும்! குழி, தோண்டினால்தானே உண்டாகும்? கல்லாகிய நான்தானே கல்லினேன்!
கல்லிய நான், கீழேயேயா கிடந்தேன்?

கலித்து - துள்ளி - எழுந்தேனா இல்லையா?

கலித்தல் "துள்ளல்' பெருகல், வெற்றி பெறுதல் என்று பல பொருளும் தந்துவிடவில்லையா?

கலித் துள்ளல் ஒருவகைத் தளையும், அத்தளை அமைந்த பாவும் ஆயனவே! அவை தாமே கலித்தளையும், கலிப்பாவும்! தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம் என எத்தனை எத்தனை உறுப்புகள்? இத்தனை உறுப்புகள் அகவலுக்கோ, வெண்பாவுக்கோ, வஞ்சிப்பாவுக்கோ உண்டா? இல்லையே! அதனால்தானே உறுப்புப் பெருக்கத்தாலும் "கலி' என ஆனேன்!
திருமணம் நிகழ்கிறது; மன்றல் என்பதும் அது! சிற்றூர்களுக்குச் சென்று கேள்! ""ஒரு கலியாணம், காட்சி உண்டா? கலியாணச் சாப்பாடு எப்பொழுது?'' இப்படிப் பேசக் கேட்பது இல்லையா? இந்தக் "கலி' என்ன? "யாணம்' என்ன? கலி, மிகுதி, துள்ளல், வெற்றி எனக் கண்டோமே!

"யாணுக் கவினாம்' என்பது தொல்காப்பிய உரிச்சொல்களுள் ஒன்று. பழ நாளில் கலத் தொடு பல நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்து வளமிகக் கொண்டு திரும்பினார்களே, அவர்களுக்கு இடப்பட்ட பழம் பெயர் என்ன? "கலியாணர்' என்பது தானே! பெரு வருவாய் உடையவர் ஆதலால், "இளங்கோக்கள்' எனப் பட்டனரே! அரசரை அடுத்துச் சொல்லக்கூடிய வளம் வாய்ந்தவர்கள் என்பதுதானே அதன் பொருள்!

மாசாத்தன் உள்நாட்டு வணிகன்! சாத்து -வணிகம். மா நாய்கன் வெளிநாட்டு வணிகன்! நாவாய் - கலம், கப்பல். அதனால், ""கலத்தினும் காலினும் (சக்கரம் உடைய வண்டி) தருவனர் ஈட்டக், குலத்தினில் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்'' என அழைக்கப்பட்டனர் (சிலம்பு). கலியாணர்க்கும், கலியாணத்திற்கும் என்ன தொடர்பு?

திருமணம், வாழ்வில் மகிழ்வான நாள் அல்லவா! பூரிப்பான பொங்கல் நாளல்லவா! மாப்பிள்ளை பெண்மகள் இருவீட்டாரும் உற்றார் உறவும் சுற்றமும் சூழலும் ஒருங்கிருந்து மகிழ்வுடன் எடுக்கும் விழா அல்லவா திருமணம்! ஆண் மகனாம் மாப்பிள்ளை பக்கம், ஒரு பெருங்கூட்டம்! பெண் மகளாம் மணப்பெண் பக்கம், ஒரு பெருங்கூட்டம்! இருபாலும் அந்நாள் வழக்கப்படி, என்ன செய்கிறார்கள்?

எறும்பு மொய்ப்பது போலவும், ஈ மொய்ப்பது போலவும் கூடி நின்று "மொய்'ப் பணம் தருகிறார்களே, மாப்பிள்ளையினிடம்! வெற்றிலையை மடக்கிச் சுருட்டி அதனுள் பணம் வைத்து, மணமகள் கையில் "சுருள்' வைக்கிறார்களே! சிறு சிறு தொகைதான்! ஆனால் மொத்தத்தில்? காவிரி, கங்கைக் கென்ன குடம் குடமாகவா மழை பொழிந்தது?

துளி துளிதானே! துளியினும் சிறிதாய்த் தேனீ எடுத்து வந்து தேன் கூட்டில் வைத்ததற்கு என்ன பெயர்? தேட்டு இல்லையா? தேடரிய வளம் தானே அது!
"கலியாணம்' மகிழ்வும், பெரு வருவாயும், பொலிவும் அமைந்தது என்பது விளக்கமாக வில்லையா?

-தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments