முகப்பு
தமிழ்மணி

உணவை மறக்கச் செய்த பண்...

சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்றான எட்டுத் தொகையில் உள்ள அகநானூறு, பண்பாட்டுக் கூறுகளான இயல், இசை, நாடகம் என முப்பரிமாணம் கொண்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:05 AM
பகிர்:

சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஒன்றான எட்டுத் தொகையில் உள்ள அகநானூறு, பண்பாட்டுக் கூறுகளான இயல், இசை, நாடகம் என முப்பரிமாணம் கொண்டது. நால்வகை நிலத்துள் நலம்பெற வாழ்ந்த நம் தமிழினம் நிலத்திற்கென இசையும் சூழலும் கொண்டதெனில் மிகையிலை எனலாம். அத்தகு நயமிக்க அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (பா.102), வேட்டுவப் பெண் இசைத்த குறிஞ்சிப் பண்ணால், உண்ணவந்த உணவை மறந்து இளங்களிறொன்று உறங்கிப்போன நிகழ்வை மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தன் எனும் புலவர் பதிவு செய்துள்ளார். அப்படியாயின் அப்பாடல் எத்தகு பண்ணைப் பெற்றிருக்கும்? உறங்கச் செய்யும் தாலாட்டிசையா? அல்லது தன்னை மறக்கச் செய்யும் மயங்கிசைப் பண்ணா? எனச் சிந்திக்கத் தூண்டுகிறதல்லவா!

""உளைமான் துப்பின் ஓங்குதினைப் பெரும்புனத்துக்
கழுதில் கானவன் பிழிமகிழ்ந்து வதிந்தென
உரைத்த சந்தின் ஊரல்இருங் கதுப்பு
ஐதுவரல் அசைவளி ஆற்ற கைபெயரா,
ஒலியல் வார்மயிர் உளரினள், கொடிச்சிப்
பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது
படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென
மறம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்'' (102:1-9)

"நாடன்' என்பது, இத்தகு செழுமைமிக்க மலையும் மலை சார்ந்த நிலத்தைப் பெற்றவன் மட்டுமன்றி, அந்நிலத்தே மகிழ்வோடு குறிஞ்சிப்பண் இசைத்து தினைப்புனத்தை உண்ணவந்த களிற்றை மெய்மறக்கச் செய்த வேடுவச்சியையும் அவளுடைய காதற் கணவன் வேடுவனையும் பெற்றிருந்தது என்பது வெள்ளிடைமலை. இதுபோல் களவொழுக்கம் நீங்கப்பெற்று கற்பொழுக்கத்துக்கு இத்தலைவன் திரும்புவானா? அல்லது களிறு மயங்கியிருப்பது போல் களவொழுக்கத்தில் மயங்கியிருப்பானோ?' எனக் குறிப்பால் உணர்த்துகிறாள் தலைவி. யானையின் வாயிலாக தம் எண்ணத்தை வெளியிட்ட சங்காலப் பெண்களின் பண்பு அது!

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments