புறநானூறு - பாடல்கள் வைப்புமுறை!
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு, தமிழ்நாட்டு அரசர்கள், குறுநில மன்னர்கள், போர்கள், புலவர்தம் பெருமைகள், மக்களின் நாகரிகம், பண்பாடு முதலிய பல செய்திகளைக் கூறும் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறத
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூறு, தமிழ்நாட்டு அரசர்கள், குறுநில மன்னர்கள், போர்கள், புலவர்தம் பெருமைகள், மக்களின் நாகரிகம், பண்பாடு முதலிய பல செய்திகளைக் கூறும் வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் கிடைக்கவில்லை. இந்நூலுக்கு, பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியுள்ளார்.
சேர, சோழ, பாண்டியர்களை மூவேந்தர்கள் என்பர். இவ்வரிசை முறையை மாற்றிப் புறநானூற்றைத் தொகுத்தவர், "முதல் பாடல் சேரனுக்கு உரியது. சேரமான் பெருந்சோற்று உதியஞ் சேரலாதன் பற்றிய பாடல். இரண்டாவது பாடல் - பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதிக்குரியது. மூன்றாவது பாடல், சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னிக்குரியது என்ற முறையில் தொகுத்துள்ளார். குறுநில மன்னர் பற்றிய பாடல்களும் இவ்வாறே தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்?
பகைவர் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டல் பற்றிய செய்திகளைக் கூறும் கரந்தைத் திணைக்குரிய 21 துறைகள் பற்றிக் கூறும் தொல்காப்பியம், பொருளதிகாரம் - புறத்திணையியல் 64ஆவது நூற்பாவில்,
""...... உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தை வேம்பே ஆரென வரூம்
மா பெருந் தானையர் மலைந்த பூவும்''(வரி 3-5)
என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். ""மிக்க பகை வேந்தன் வேறுபாடு தெரிதல் வேண்டி உயர்ந்த புகழையுடைய போந்தை (பனம் பூ) எனவும், வேம்பு (வேப்பம் பூ) எனவும், ஆர்(ஆத்திப் பூ) எனவும் தமிழ்நாட்டு நிலவேந்தர் சூடிய பூவும்'' என்பது இளம்பூரணர் உரை. மேலும், உரையாசிரியர் "பசுக்களைக் கவரும்போது நெடுநில வேந்தரும் விரைவாக எழுவராதலின், பசு மீட்டலின்கண் பூப் புகழப்பட்டது' என்று விளக்கமளிக்கிறார்.
ஆக, தொல்காப்பியர் முதலில் சேரனுக்குரிய பனம் பூவையும், அடுத்துப் பாண்டியனுக்குரிய ஆத்தி மாலையையும் குறிப்பிட்டுவைத்த வைப்பு முறைப்படி புறநானூற்றைத் தொகுத்தவர், தொல்காப்பியருக்கு மதிப்பளித்து, அவர் வைப்பு முறையைப் பின்பற்றிப் புறநானூற்றுப் பாடல்களைத் தொகுத்துள்ளார் எனக் கருதலாம்.