’மயின் முறைக் குலத்துரிமை'
தெய்வங்கள் அனைத்தும் வாகனத்தையும், ஆயுதங்களையும் உடையனவாகக் காட்சி தருகின்றனர். முருகனுக்கு வேலும் மயிலும் ஆயுதமாகவும், வாகனமாகவும் உள்ளன. எனவே,
தெய்வங்கள் அனைத்தும் வாகனத்தையும், ஆயுதங்களையும் உடையனவாகக் காட்சி தருகின்றனர். முருகனுக்கு வேலும் மயிலும் ஆயுதமாகவும், வாகனமாகவும் உள்ளன. எனவே, ’வேலும், மயிலும் துணை' என்கிறோம். வேலின் வடிவம் முன் பகுதி கூர்மையாகவும், அடுத்த பகுதி இருதயத்தைப் போல் விரிந்து பரந்தும், அடிப்பகுதி கீழ் நோக்கி தாழ்ந்தும் இருப்பதைப் போல் நம் அறிவு கூர்மையாகவும், அடுத்த பகுதியைப் போல் இருதயமும், அடிப்பகுதியைப் போல் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்பதை மனிதர்களுக்கு உணர்த்த ஒரு சின்னமாக நம் முன்னோர் ஒரு சிறந்த தத்துவத்தை வேலின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
அதே போல் மயில்களுள் ஓங்கார மயில், அசுர மயில், இந்திர மயில் ஆகிய மூன்று வகை உண்டு. இருப்பினும் மயில்களின் சிறப்பு என்னவென்றால், ஓர் இடத்தைவிட்டு இன்னொரு இடத்திற்குப் புலம் பெயரும்போது அவை தனித்துச் செல்லாமல், குடும்பமாகத்தான் செல்லும். அப்படி மயில் தம் குஞ்சுகளுடன் இருக்கும்போது மூத்த குஞ்சு முதலில் தோகை விரிக்கும், ஆடும். அதன் பிறகே மற்ற குஞ்சுகள் தோகை விரித்தாடும். அதுதான் முறை.
மயிலிடம் உள்ள இந்தச் சிறப்பைத்தான் கைகேயி மனமாற்றம் ஏற்படும் முன் கூனிக்கு உணர்த்த ’இராமனுக்கு முடி சூட்டுவதுதான் முறை' (மந்தரை சூழ்ச்சிப் படலம்) எனக் கூறுவார் கம்பர்.
’’வெயின் முறைக் கதிரவன் முதலிய மேலோர்
உயிர் முதற்பொருடினும் பினுமுறை திறம்பாதோர்
மயின் முறைக் குலத்து ரிமையை
மனுமுதன் மரபைச் செயினுறப் பலைச்
சிந்தையா யென் சொனாய் தீயோய்''
என மயிலின் முறை தவறாச் சிறப்பைப் புகழ்ந்துள்ளார். சூரியன் தன் தன்மை மாறினும், தசரதன் தம் முறையிலிருந்து மாறமாட்டார். மயிலுக்கு ஒப்ப முறை தவறாமல் ஆட்சி செய்துவரும் என் குலநாடான கேகேயத்திலிருந்து வந்த நான், உன் அறிவுரையைக் கேட்க மாட்டேன், தீயவளே! எனக் கூனிக்கு உணர்த்துகிறாள் கைகேயி.
ஆகவே, வேல் போலவும் மயிலின் முறைதவறாப் பண்பையும் பெற்று வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ளத்தான் ’வேலும் மயிலும் துணை' என்றனர் போலும் நம் முன்னோர்! கம்பரின் இந்த உவமை வியப்புறச் செய்கிறதல்லவா!
மயிலின் இந்தச் சிறப்பைக் கண்டுபிடிக்க, மயில், குஞ்சு பொரித்தவுடன் ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒரு வண்ணமாக அதன் காலில் வளையங்கட்டி, அதிலிருந்து மூத்த குஞ்சு அடையாளம் கண்டறியப்பட்டதாக ’சயின்டிபிக் அமெரிக்கன்' என்ற நூலிலிருந்து தாம் விளக்கம் கண்டதாக நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை கூறியுள்ளார் (கல்கி, 20.12.2970).