முனிவர்கள் தங்களின் பூசைத் தேவைக்காக நீர் சேமித்து வைத்திருந்த பாத்திரம் கமண்டலம் எனப்படும். இது செம்பு உலோகத்தால் குழல் வடிவங்கொண்ட மூக்கினை உடையதாகவும், அதை தூக்கிச் செல்லும் வசதிக்காக கவிந்த அரை கோள வடிவக் கைப்பிடி கொண்டதாகவும் இருக்கும். இதைத்தான் நாம் அறிந்திருக்கிறோம்; பார்த்திருக்கிறோம். ஆனால், உலோக உபயோகம் வருவதற்கு முன்பு முனிவர்கள் தங்கள் கமண்டலத்தை புரச மரத்தின் பட்டைகளை உரித்து நீக்கிய மரத்தண்டில் செய்யப்பட்டதை உபயோகித்து வந்திருக்கின்றனர் என்ற விவரத்தை குறுந்தொகை 156ஆவது பாடலில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடி வைத்துள்ளார்.
"செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்து'
""சிவந்த பூக்களையுடைய முருக்க மரத்தினது நல்ல பட்டையைக் களைந்து, அதன் தண்டோடு, ஏந்திய தாழ்கின்ற கமண்டலத்தையும்'' என்பது புலியூர் கேசிகன் உரை. "முருக்கு' என்பதைப் புரசமரம் என்றும் கூறுவர். செம்பில் நீர் சேமித்து வைத்தால் அது கெடாது என்பதும், அதைப் பருகுவதால் உடல்நலம் மேம்படும், உயர் ரத்த அழுத்தம் குறையும் என்பதும் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பாகும். உலோகப் பயன்பாடு உபயோக காலத்திற்கு முன்பிருந்தே தவசிகள் தம் பூசைக்கு நன்னீர் சேமிப்புக் கமண்டலமாக புரச மரத்தண்டை உபயோகித்துள்ளனர் என்பது குறுந்தொகைப் பாடல் வழி தெரிய வருகிறது.