பழமொழி நானூறு
சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் - கடைக்கால்
செயிரறு செங்கோல் செலீஇயினான் இல்லை
உயிருடையார் எய்தா வினை. (பா-105)
பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும், இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று, பிற்காலத்தில், குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்), உயிருடையார் அடைய முடியாததொரு நல்வினைப் பயன் இல்லை. (க-து.) தீமையே அடைவார், என்றாயினும் நன்மையையும் அடைவர்.
"உயிருடையார் எய்தா வினை இல்லை' என்பது பழமொழி