வனைபவர்!
தற்காலத்தில் அழகு நிலையங்கள் பெருகி அவை தொழிலகங்கள் ஆகிவிட்டன. திரைத்துறையிலும், நாடகத் துறையிலும் ஒப்பனைக் கலைஞர்கள் அழகு செய்யும் பணியைச் செய்து வந்திருக்கின்றனர்.
தற்காலத்தில் அழகு நிலையங்கள் பெருகி அவை தொழிலகங்கள் ஆகிவிட்டன. திரைத்துறையிலும், நாடகத் துறையிலும் ஒப்பனைக் கலைஞர்கள் அழகு செய்யும் பணியைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கம்பர் பெருமான் ஒப்பனைக்காரர்களை தன் காப்பியத்தில் படைத்துள்ளார்.
"வனைபவர் இல்லை அன்றே,
வனத்துள் நாம் வந்த பின்னர்?
அனையன எனினும், தாம் தம்
அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;
வினை செயக் குழன்ற அல்ல;
விதி செய விளைந்த; நீலம்
புனைமணி அளகம் என்றும்
புதுமையாம்; உவமை பூணா'
(கி.கா. நாடவிட்ட படலம், பா.57)
"நாங்கள் காட்டுக்கு வந்த பின்பு, சீதையின் முன் நெற்றி முடிகளை அழகு செய்பவர் நம்மிடம் இல்லை அல்லவா? முன் நெற்றியில் சுருண்டு கிடந்த "அளகம்' இயல்பாகவே அழகாகவும், எழில் கொஞ்சுவதாகவும், புதுமையாகவும், உவமை சொல்ல முடியாததாகவும் இருந்தது' என்று ராமன் அனுமனிடம் சொல்கிறார்.
"அளகம்' (பெ) என்பதற்கு நீர், மழைநீர், முள்ளம்பன்றி முள், பெண்மயிர், மயிர்க் குழற்சி, நுதலை/நெற்றி/நெற்றியைச் சார்ந்த முன்னுச்சி முடி எனப் பல பொருள் தருகிறது அகராதி.
"அழகுபடுத்துபவர்' (ஒப்பனைக்காரர்) என்பதை "வனைபவர்' என்று கம்பர் குறிப்பிடுகிறார்.
-சி.பொன்ராஜ்