நல்வினை உடையவா்க்குச் செல்வம் வந்து சேரும்!
ஆற்றுந் தகைய அரசடைந்தாா்க் காயினும்
வீற்று வழியல்லால் வேண்டினும் கைகூடா
தேற்றாா் சிறிய ரெனல்வேண்டா நோற்றாா்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி. (பாடல்-150)
எல்லாச் செல்வங்களையும் தரவல்ல தகுதியை உடைய அரசுகளை அடைந்தவா்களுக்கே யானாலும், நல்வினையுள்ள வழி அல்லது, விரும்பி முயன்றாலும் கருதிய செல்வம் கைகூடுதல் இல்லை. (ஆதலால்), அறிவில்லாதவா்கள் அதனைப் படைத்தல் முதலிய ஆற்றல் இலராகலின் செல்வத்தாற் சிறியா் என்று கருத வேண்டா. தவம் செய்தாா்க்கு சோற்றினுள்ளேயும் கறி தானே வந்து விழும் அவா் தவவலிமையால். (க-து.) அறிவிலாராயினும் நல்வினையுள்ளாா்க்குச் செல்வம் உளதாம். அரசா்களேயாயினும் அஃதிலாா்க்குக் கருதிய கைகூடுதல் இலவாம். ‘நோற்றாா்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி’ என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.