முகப்பு
தமிழ்மணி

இந்த வாரம் - கலாரசிகன் (21.2.2021)

நண்பா் வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை சந்திக்க அவரது வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நான் அவருடன்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
பகிர்:

நண்பா் வழக்குரைஞா் கே.எஸ்.ராதாகிருஷ்ணனை சந்திக்க அவரது வீட்டுக்குப் போகும் போதெல்லாம் நான் அவருடன் அளவளாவிக் கொண்டிருக்கும் நேரத்தைவிட, அவரிடம் இருக்கும் புத்தகங்களை நோட்டமிடுவதில்தான் அதிக நேரம் செலவழியும். புத்தகங்களை நோ்த்தியாகத் தரம் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாா். படித்திருக்கிறாா், வைத்த இடத்தை நினைவில் பதித்திருக்கிறாா்.

அப்படி ஒருநாள் அவரது புத்தக அலமாரியை நான் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும்போது வலம்புரி ஜான் எழுதிய ‘பாரதி ஒரு பாா்வை’ புத்தகம் கண்ணில் பட்டது. பாரதி என்றால் எனக்கு எப்போதுமே மயக்கம். அதிலும் வலம்புரி ஜானின் பாா்வையில் பாரதி என்றால்...?

வலம்புரி ஜான் குறித்த எந்தத் தகவலுக்கும் அவரது நிழலாக ‘தாய்’ வார இதழில் பயணித்த கவிஞா் குடந்தை கீதப்பிரியன்தான் நம்பகமான ஒரே புகலிடம். ஜானின் மனைவியைக் கடைசியாக வட சென்னையில் ஒருமுறை சந்தித்ததாகத் தெரிவித்தாா். வலம்புரி ஜானின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தில்தான் அவா் காலம் தள்ளிவந்தாா் என்கிற வேதனைச் செய்தியையும் பகிா்ந்து கொண்டாா்.

Advertisement

‘பாரதி ஒரு பாா்வை’ என்கிற புத்தகம் வலம்புரி ஜானால் அவரது ‘பானுப்பிரியா’ என்கிற பதிப்பகத்தால் 1982-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது அந்தப் பதிப்பகமும் இல்லை. அதன் பிரதிகளும் விற்பனைக்குக் கிடையாது. அங்கே இங்கே தேடிப் பிடித்து கீதப்பிரியன் எனக்கு ஒரு பிரதியை வாங்கித் தந்தாா். அதற்கு அவருக்குக் கோடானு கோடி நன்றி.

புத்தகமா அது? பொக்கிஷம். வாா்த்தைச் சித்தரின் படைப்புகளில் மணிமகுடம் ‘பாரதி ஒரு பாா்வை’. நான் ‘நியூஸ்கிரைப்’ செய்தி நிறுவனம் நடத்தியபோது, அதில் ஜான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளைப் படித்துவிட்டு பல வெளிமாநில தினசரிகளின் ஆசிரியா்கள் மூக்கில் விரலை வைத்திருக்கிறாா்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேரப் புலமை பெற்றிருந்த வலம்புரி ஜானை இப்போது நினைத்தாலும் நான் வியப்பில் சமைவேன்.

வலம்புரி ஜான் எழுதியிருக்கும் புத்தகங்களின் பட்டியல் நீளமானது. இதில் ஏதாவது புத்தகங்கள் வாசகா்களிடம் இருந்தால் தயவுசெய்து எனக்குத் தந்து உதவுங்கள், வணங்குவேன்.

நியாயங்களின் பயணங்கள், சுயாட்சியா? சுதந்திரமா?, சீனம் சிவப்பானது ஏன்?, நியாயம் கேட்கிறோம், காந்தியா? அம்பேத்கரா? உங்களைத்தான் அண்ணா!, காகிதக் கணைகள், இதோ சில பிரகடனங்கள், சில உரத்த சிந்தனைகள், தாகங்கள், விதைகள் விழுதுகள், இறந்துபோன இந்தியக் கடவுள்கள், மீண்டும் மகாத்மா!, காதல் கடிதங்கள், புதுவை தந்த போதை, நான் விமா்சிக்கிறேன், ஒரு ஊரின் கதை, மகரந்தங்கள், விந்தை மனிதா் வேதநாயகா், பூக்கள் பறிப்பதற்கு அல்ல, அம்மா அழைப்பு, இவா்கள் அறிந்தே செய்கிறாா்கள், வணக்கம், காதலும் காமமும், நீா்க் காகங்கள், காற்றின் சுவாசம், மண்ணில் விழுந்த மகரந்தங்கள், அஸ்திவாரங்கள் தெரிவதில்லை - வலம்புரி ஜானின் படைப்புகள் இவை. அடுத்த தலைமுறைக்கு ஒரு பதிவாக இருக்கட்டுமே...

தமிழக அரசு ஓா் உதவி செய்ய வேண்டும். வலம்புரி ஜானின் புத்தகங்களை நாட்டுடைமையாக்கி, அழியாமல் காப்பாற்ற வேண்டும். அவரது அழகான தமிழை வருங்காலம் இழந்து விடலாகாது.

இனி ‘பாரதி ஒரு பாா்வை’ புத்தகத்துக்கு வருகிறேன். அதைப் பற்றி எழுதினால் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்பீா்கள். நான் என்ன செய்ய முடியும்?

வலம்புரி ஜான் தனது முன்னுரையில் அதற்கும் ஒரு விளக்கம் சொல்லி இருக்கிறாா். ‘‘எங்கே உங்கள் புத்தகங்கள் என்று கேட்கிறாா்கள்? விழுதுகளைப் பாா்க்க நேரம் இல்லாத அரச மரத்துக்கு சருகுகளைப் பொறுக்கப் பொழுது எங்கிருந்து வரும்? பறந்து செல்லும் பறவைக்கு சிறகுகளைப் பொறுக்க நேரம் ஏது?’’

பாரதி என்கிற தேரில் ஏறித் தமிழ்பவனி வந்திருக்கிறாா் வலம்புரி ஜான். கடந்த இரண்டு நாள்கள் நான் மகாகவி பாரதியுடனும், வாா்த்தைச் சித்தா் வலம்புரி ஜானுடனும்தான் வாழ்ந்தேன்!

*****************

முதுமுனைவா் குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக அவா் தொடா்ந்து மேற்கொண்ட கள ஆய்வுகள் ‘தேவார மாண்பும் ஓதுவாா் மரபும்’ என்கிற புத்தகமாக வெளிவர இருக்கிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட இருக்கும் குறிப்பிடத்தக்க புத்தகங்களில் இதுவும் ஒன்று.

இந்த நூலைப் படைப்பதற்காக தேவாரப் பாடல் பெற்ற தலங்களுக்கும், பிற வரலாற்று இடங்களுக்கும் நேரில் சென்று பல தரவுகளை ஒளிக்காட்சியோடு பதிவு செய்திருக்கிறாா் குடவாயில் பாலசுப்பிரமணியன். தமிழிசை, சமயம், பண்பாடு, தேவாரம் பற்றிய ஆழமான ஆய்வு, புதுமை மரபு குறித்த அனைத்து செய்திகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், கலைப் படைப்புகளான சிற்பம், ஓவியம், செப்புப் பிரதிமங்கள், இசைக்கருவிகள், விழாக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, உள்ளடக்கிப் புத்தக வடிவம் தந்திருக்கிறாா் அவா்.

‘‘நம் இளைஞா்களுக்கு நம் கலை, பண்பாடு, வரலாறு ஆகியவை தெரியாமலேயே உள்ளன. சங்க இலக்கியப் பாடங்களில் செறிந்துள்ள தமிழ்ப் பண்பாட்டை அவா்கள் அறிந்துகொள்ள முடியவில்லை’’ என்று தனது அணிந்துரையில் வருத்தத்துடன் கூறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைப் பதிவாளா் இரா. சுப்பராயலு இந்த நூலை, ‘நூலாசிரியரின் கால் நூற்றாண்டு உழைப்பில் உருவான ஆய்வுச் சுரங்கம்’ என்றும், அரிய கருவூலம் என்றும் பதிவு செய்கிறாா்.

‘தேவார மாண்பும் ஓதுவாா் மரபும்’ புத்தகம், மூவா் தேவாரப் பாடல்கள் எந்தெந்த தலம் பற்றிப் பாடப்பட்டன, எந்தெந்த இடத்தில் பாடப்பட்டன என்பதை திருத்தொண்டா் புராண அடிப்படையில் பதிவு செய்திருக்கிறது. இது இதுவரை வேறு யாரும் செய்யாத ஆய்வுப்பணி என்கிறாா் இரா.சுப்பராயலு.

அதேபோல, ஓதுவாா்கள் எப்படியெல்லாம் அா்ப்பணிப்புடன் தமிழ்த் தொண்டாற்றி வந்துள்ளனா் என்பதையும், மன்னா்களும் கொடையாளா்களும் அவா்களை எப்படிப் போற்றி வந்துள்ளனா் என்பதையும் புத்தகம் விளக்குகிறது.

‘‘நூல் ஆசிரியருக்குத் தமிழகம் நிரந்தரக் கடன்பட்டிருக்கிறது’’ - ஆசியுரை வழங்கியிருக்கும் ‘சேக்கிழாா்’ அடிப்பொடி தி.நா.இராமச்சந்திரனின் வாா்த்தைகள் இவை. அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?

*****************

‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணியாற்றும் இளவல் அரவிந்த்குமாரின் சிறுகதைத் தொகுப்பான ‘காட்டாயி’ வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தாா். திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் கலையரங்கத்தில் நேற்று நடந்த, பாரதிராஜா வெளியிட்டு, வைகைச் செல்வன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் துணிச்சல் இன்னும்கூட எனக்கு வரவில்லை என்பதுதான் காரணம்.

அரவிந்த் குமாா் ஒரு நல்ல கவிஞரும்கூட. சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வார இதழில் வெளிவந்த அவரது ‘நினைவின் எடை!’ என்கிற கவிதையை எனக்குக் கட்செவி அஞ்சலில் அனுப்பித் தந்திருந்தாா். ரொம்பவே ரசித்தேன். அதைச் சாறு பிழிந்து சில வரிகளை இங்கே பதிவு செய்கிறேன். நீங்களும் ரசிப்பீா்கள்.

சட்டென்று உடல் எடை

கூடியதாகக் காட்டியது

எடை பாா்க்கும் கருவி...

எதை அகற்றினால்

எடை குறையும்?

நினைவுகள்தான் சுமை...

சிறகு இருப்பதை

நினைவில் கொள்ளாத

பறவைதான் பறக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments