கோவையில் பரபரப்பு : இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு!
கோவை புதூர் ரிங் சாலையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு குறித்து...
கோவை: கோவை புதூர் ரிங் சாலையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது ஏறி படம் எடுத்தாடிய நல்ல பாம்பு விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை புதூர் ரிங் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலை குறுக்கே ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வாகனயொட்டி, தனது இருசக்கர வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, பயத்தில் கீழே இறங்கித் தூரமாக சென்றுள்ளார். ஆனால், அந்தப் பாம்பு அங்கிருந்து நகர்ந்து செல்லாமல், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தின் மீது மெதுவாக ஏறியது.
பின்னர் இருசக்கர வாகனத்தின் முன் பகுதிக்கு வந்த அந்த நல்ல பாம்பு, அங்கு அமர்ந்தபடி தலையை உயர்த்திப் படம் எடுத்தாடி நீண்ட நேரம் வாகனம் மீது நின்றது. இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற பிற வாகனயொட்டிகள், ஆச்சரியத்துடனும் பயத்துடனும் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, இந்த அரிய காட்சியைத் தங்களது செல்போன்களில் விடியோ எடுத்தனர்.
Advertisement
சிறிது நேரம் அந்த இருசக்கர வாகனைத்தை தனது 'கட்டுப்பாட்டில்' வைத்திருந்த நல்ல பாம்பு, பின்னர் தானாகவே இறங்கிப் புதருக்குள் மறைந்தது.
இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், "அந்தப் பாம்பு தனது பயணத்தைத் தொடர லிப்ட் கேட்டு இருக்கும் போல" என இணையவாசிகள் வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், இதுபோன்ற வனப்பகுதி சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.