முகப்பு
தமிழ்மணி

பூக்காரியின் இழப்பு

நாட்டில் போர் என்று வந்துவிட்டால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இழப்பும், துன்பமும் ஏற்படும். சாதாரண பூக்காரி எப்படி இந்த இழப்பை சந்திக்கிறாள் என்பதை நொச்சி நியமங்கிழார் எனும் புலவர் பாடிய பாடல் புலப்படுத்துகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:


நாட்டில் போர் என்று வந்துவிட்டால், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இழப்பும், துன்பமும் ஏற்படும். சாதாரண பூக்காரி எப்படி இந்த இழப்பை சந்திக்கிறாள் என்பதை நொச்சி நியமங்கிழார் எனும் புலவர் பாடிய பாடல் புலப்படுத்துகிறது.

"நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினைஎனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ
அளியள்தானே பூவிலைப் பெண்டே'

 (புறநா.293)

எதிரிகளை அழிக்கும் பொருட்டு, யானை மேலிருந்து ஒருவன்  போர் முரசு முழங்குகிறான். முரசின் பேரொலியானது வீரர்களை விரைந்து போர்க்களம் செல்லத் தூண்டுகிறது. பூ விற்கும்  பெண் ஒருத்தியும் இந்தப் போர் முரசாணையைக் கேட்கிறாள். ஆடவர் பலர் போர் முனைக்குச் சென்றிருப்பார்கள் என்பதால்,  போருக்குச் சென்றுள்ள ஆடவர் வீடுகளைத் தவிர்த்து, வேறு மனைகளுக்குப் பூ விற்கச் செல்கிறாள் பூக்காரி.

வீடுகளில் தனித்திருக்கும் பெண்கள் பூ வாங்கமாட்டார்கள் என்பது பூக்காரிக்குத் தெரியும். மகிழ்ச்சியின் வெளிப்பாடே பூச்சூடுதல். ஆடவர் போருக்குச் செல்லும் தருணங்களில், எந்தவொரு பெண்ணும் பூச்சூடி மகிழ மாட்டாள். பூ விற்பனை ஆகாததால்,  பூக்காரிக்கும் இழப்பு ஏற்படுகிறது. அதனால் இந்தப் பூக்காரி பாவம்; அவள் இரக்கம் காட்டத்தக்கவள் என்று புலவர் வருத்தப்பட்டு, பூக்காரிக்காக இரங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.