சுந்தரரின் மாறிலா மகிழ்ச்சி!
சுந்தரமூர்த்தி சுவாமிகள், தில்லை சிற்றம்பலத்தில், அம்பலவாணன் திருச்சந்நிதியில், திருக்களிற்றுப்படி அருகில் நின்று, வழிபட்ட அற்புதக் காட்சியை சேக்கிழார் பெருமான்
சுந்தரமூர்த்தி சுவாமிகள், தில்லை சிற்றம்பலத்தில், அம்பலவாணன் திருச்சந்நிதியில், திருக்களிற்றுப்படி அருகில் நின்று, வழிபட்ட அற்புதக் காட்சியை சேக்கிழார் பெருமான் "பெரியபுராணம் 106-ஆவது பாடலில்' பதிவு செய்திருக்கிறார்.
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்!
புலன் உணர்வு ஐந்தையும் கண்களே தமதாக்கிக் கொள்ள, அளத்தற்கரிய மனம் முதலிய நான்கு கருவிகளின் செயல்கள் எல்லாம் சித்தம் ஒன்றின் செயலேயாக, உயிர்க்குற்ற முக்குணங்களின் செயல்கள் எல்லாம் சாத்துவிகம் என்ற ஒன்றேயாகி நிற்க, பிறை தவழும் சடையினையுடைய கூத்தபிரான் செய்தருளுகின்ற அளவில்லாத இன்பத்தை விளைவிக்கும் ஒப்பற்ற திருக்கூத்தால், தம்மிடத்தெழுந்த மிகப்பெரிய இன்ப வெள்ளத்தில் மூழ்கி, நீங்காத பெருமகிழ்ச்சியால் உள்ளமும், உடலும் ஒருங்கு மலர்ந்தார் என்கிறார்.
Advertisement
சாத்துவிகம், இராசதம், தாமசம் ஆகிய மூன்று குணங்களுள், ஏனைய இரண்டும் தொழிற்படாமல் சாத்துவிகத்துள் அடங்கி நிற்க, அம்பலவாணனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டாராம்! என்னே ஓர் அற்புதக் காட்சி!