இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள உறுப்புகளுள் கண்களே முதன்மையானவை. அதனால்தான் நான் மணிக்கடிகை "கண்ணிற் சிறந்த உறுப்பில்லை' என்று கூறுகிறது. மாந்தர்க்குக் கண்டு களிப்பதற்குக் கண்களையும் செவிச்சுவை உணர செவிகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.
கண்கள் பார்வையை எட்டுகின்ற தூரம் வரை செலுத்த முடியும். இது கண்களுக்கு மட்டும் கிடைத்த சிறப்பு. அதலால்தான் அதனை "சென்று பற்றுகின்ற பொறி' என்று மாதவ சிவஞான முனிவர் சிறப்பித்துக் கூறினார்.
முத்தொள்ளாயிர ஆசிரியரும் "வரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று இரக்கண்டாய்' என்பார்.
இராமலிங்க அடிகள் தனது திருவருட்பா ஆறாம் திருமுறை நாமாவளிப் பதிகத்தில் இரண்டு புருவங்களுக்கு இடைவெளியான இடைத்தானதைக் கண் புருவப்பூட்டு என்று சிறப்பித்துச் சொல்லுகின்றார்
கையறாவிலாது நடுக்
கண்புருவப்பூட்டு
கண்டு களி கொண்டு திறந் துண்டு
நடுநாட்டு
என்று கண்களை மிக உயர்வாக மொழிகின்றார்.
திருவள்ளுவர் உலகுக்கு யாத்தளித்த நூற்று முப்பது மூன்று அதிகாரங்களில் மாந்தர் கற்றலுக்கும் கேட்டலுக்கும் மிக்க பயனுள்ளதாய் அமைந்துள்ள அதிகாரங்கள் நான்கு. அவை கல்வி, கல்லாமை, கேள்வி, கண்ணோட்டம் ஆகியன.
கல்வி அதிகாரத்தில் கற்றற்குரிய நூல்களைக் கற்றலின் மேன்மையினைக் கூறுவார். கல்வி என்னும் அதிகாரத்தில் கீழ்க்கண்ட குறள் அருமை.
கண்ணுடையார் என்பர் கற்றோர்
முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லாதவர்
அதாவது, கற்றவரே கண்ணுடையவரென்று உயர்த்திச்சொல்லப்படுவார். மற்றைக் கற்றிலாதவர் முகத்தினிடத்து இரண்டு புண்ணுடையவர் என்று சொல்லுகின்றார்.
கல்வி அதிகாரத்தில் கண்களுக்கும் கற்றலுக்கும் உரிய சிறப்பைச் சொல்லுவார். அதற்கு அடுத்த அதிகாரமான கல்லாமையில் கற்றலுக்கு உரிய நூல்களைக் கல்லாமல் வாழ்க்கையினைக் கழித்தமையால் வந்த இழுக்கு பற்றிச் சொல்லுவார்.
விலங்கொடு மக்கள் அனையர்
இலங்குநூல்
கற்றா ரோடு ஏனையவர்
மக்களை நோக்க விலங்கு எவ்வளவு இழிந்ததோ அவ்வாறே கற்றாரை நோக்கக் கல்லாதவரும் இழிந்தவர்
ஆவர் என மொழிந்துள்ள கருத்து உயர்வானது.
கேள்வி என்னும் அதிகாரத்தில்
செவியிற் சுவையுணரா வாயுணர்வின்
மாக்கள்
அவியினும் வாழினும் என்
என்கிறார். காதுகளால் அனுபவிக்கப்படும் சுவைகளை அறியாது வாயால் உண்ணப்படும் சுவைகளை அறியும் அறிவினையுடைய மனிதர் செத்தாலும் இருந்தாலும் பயனில்லை என்பது பொருள்.
கண்களால் காட்சிகளை மட்டுமே காண இயலும். சுவையை உணர இயலாது. அதனால்தான் கண்ணினும் செவிகளைச் சிறப்பாகச் சொல்லி முடித்தார் கண்ணோட்டம் என்னும் அதிகாரத்தில் இரண்டாவது குறள் கண்ணோட்டத்தின் இன்றியமையாமையினை விளக்கிக் கூறுகிறது.
கண்ணோட்டத்து உள்ளது உலகியல்
அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை
அதாவது, உயர்ந்தோரியல்பு கண்ணோட்டத்தின் சார்பாக உள்ளது. கண்ணோட்டம் இல்லாதவர்கள் உலகில் இருத்தல் நிலத்திற்கு பாரமே ஆகும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.