பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் மதுரைக்கருகிலுள்ள சோழவந்தான் எனும் ஊரில் பிறந்தவர். இவர் இலக்கண இலக்கிய ஆராய்ச்சியிலும் உரைநடை எழுதுவதிலும், சித்திரக்கவி யாப்பதிலும் ஆற்றல் மிக்கவர்.
திருக்குறள் சண்முக விருத்தி தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதலிய நூல்களும் ஏகபாத நூற்றந்தாதி முதலிய பிரபந்தங்களும் இவர் இயற்றியவையே. இவர் இயற்றிய திருக்குறள் நேரிசை வெண்பா நூல் புகழ் மிக்கது.
திருக்குறள் நேரிசை வெண்பாவில் வரிசையாகக் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு திருக்குறளையும் பின்னிரண்டடியாக வைத்து அக்குறள் நீதிக்கியைந்த ஒரு நிகழ்வு அல்லது நீதி அடங்குமாறு பாடிய அடிகள் இரண்டை முன்னிரண்டடியாக அமைத்து இரண்டாம் அடியின் மூன்றாம் சீரில் வள்ளுவரே எனத் தெய்வப்புலவரை முன்னிலையாக்கித் தனிசொல்லோடு நேரிசை வெண்பா வடிவில் இயற்றப்பெற்றதால் இது திருக்குறள் நேரிசை வெண்பா எனப்பெயர் பெற்றது.
திருக்குறளுக்கு இவ்வாறு இயற்றப்பெற்ற நூல்களுள் இதுவொன்றே வள்ளுவரை முன்னிறுத்தி எழுதிய நூல் என்பது திருக்குறளுக்கும் வள்ளுவப்பெருந்தகைக்கும் பெருமை தருவது.
எடுத்துக்காட்டாக இரு திருக்குறள் நேரிசை வெண்பாக்கள்:
சாயா இரணியனும்சாய, அவன்
இளஞ் சேய்
மாயாநல் வாழ்வுறலென்
வள்ளுவரே - ஆயின்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பெய்யமழை இந்திரன்பாற்
பெட்டான் பொருநை யொடு
வையையுடை யானுமென்னோ
வள்ளுவரே - உய்யவே
நீரின்று அமையாது உலகுஎனின்
யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.