இயேசுவின் சீடர்கள் பன்னிரண்டு பேர். அவர்கள் அனைவருமே மீன்பிடித்தல், தச்சு வேலை செய்தல் போன்றவற்றை செய்து வந்த சாதாரண மக்கள். பெரிய படிப்பறிவு ஏதும் இல்லாதவர்கள். அவர்களுக்கு இயேசுதான் வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருந்தார்.
ஒருநாள் அவர்கள், இயேசுவிடம், "குருவே, எங்களுக்கு இறைவனிடம் எப்படி ஜெபிப்பது என்று கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டனர்.
அதற்கு இயேசு, நீங்கள் ஜெபிக்கும்போது, "தந்தையே உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிக்கிறோம். அது போல எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைகளுக்கு உட்படுத்தாதேயும். தீயோரிடமிருந்து எங்களை விடுவித்தருளும் என்று ஜெபியுங்கள்'' என்றார்.
நாம் நம் பரமதந்தையிடம் ஜெபிக்கும்போது நம் இறைவனுக்கு அஞ்சி, நம்மையே தாழ்த்தி ஜெபிக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அதை ஒரு நிகழ்ச்சி மூலம் இயேசு வலியுறுத்துகிறார்.
இயேசு சொன்ன நிகழ்வு இதுதான் - இரண்டு பேர் இறைவனிடம் வேண்டிக்கொள்வதற்காக ஆலயத்துக்குச் சென்றனர். ஒருவர் நேர்மையாளர். எல்லாம் கற்றுத் தெரிந்தவர். மற்றவர் வரி வசூலிப்பவர் (அக்காலத்தில் வரி வசூலிப்பவருக்கு ஊரில் பெரிய மரியாதை கிடையாது).
நேர்மையாளர் ஆலயத்தின் பீடத்தின் முன் நின்றுகொண்டு, "இறைவா, நான் கொள்ளையர், நேர்மையற்றோர் மற்றும் பாவிகள் போலவோ இதோ வெளியில் நிற்கும் வரி வசூலிப்பவன் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் பத்தில் ஒரு பகுதியை ஆலயத்துக்குக் கொடுக்கிறேன்'' என்று தற்பெருமையாக
ஜெபித்தார். வரி வசூலிப்பவரோ, ஆலயத்தின் வெளியில் நின்றுகொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணிவில்லாமல் தன் மார்பில் அடித்துக் கொண்டு,""இறைவா, பாவியாகிய என் மீது இரக்கமாயிரும்'' என்றார்.
அந்த இரண்டு பேரில் வரி வசூலிப்பவரின் ஜெபமே இறைவனுக்கு ஏற்றதாக இருக்கும் என்கிறார் இயேசு. ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்பவர் தாழ்த்தப் பெறுவார். தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்பவர் இறைவனின் முன்னால் உயர்த்தப் பெறுவார் என்பதுதான் இயேசு இந்த நிகழ்வின் மூலம் நமக்குத் தரும் செய்தி. எனவே நாம் ஜெபிக்கும்போது இறைவனுக்கு அஞ்சி தாழ்மையுடன் ஜெபித்தால் நம் மன்றாட்டு ஏற்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.