முகப்பு
வெள்ளிமணி

காலசர்ப்பதோஷம் நீக்கும் கார்கோடேசுவரர்

கலசர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் துன்பங்களும், தீராத நோய்களும் ஸ்ரீகார்கோடேசுவரரை வழிபட்டால் நீங்கும். அதிலும் கடக ராசியினர் இத்தலத்திற்கு வந்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

Updated On : 6 பிப்ரவரி, 2014 at 4:27 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:50 AM

கலசர்ப்ப தோஷத்தினால் ஏற்படும் துன்பங்களும், தீராத நோய்களும் ஸ்ரீகார்கோடேசுவரரை வழிபட்டால் நீங்கும். அதிலும் கடக ராசியினர் இத்தலத்திற்கு வந்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி என்ற ஊரில்தான் ஸ்ரீகார்கோடேசுவரர் அருள்புரிகிறார். அரியலூரிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், திருவையாறு தலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருமானூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

சுயம்புவாகத் தோன்றிய இறைவன் கார்க்கோடகன் என்னும் பாம்பு அரசனின் வேண்டுதலுக்கு இணங்க பாம்பு வம்சத்தை கடக ராசி, கடக லக்னத்தன்று உயிர்ப்பித்தார். எனவே ஸ்ரீகார்கோடேசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இக்கோயிலில் சிவபெருமானை பாம்பு ஒன்று வழிபடும் வகையில் காணப்படும் சிற்பமே அதற்கு சாட்சி. மன்மதனை உயிர்ப்பித்து ரதிதேவிக்கு மாங்கல்ய பலம் அளித்ததும் இந்தத் தலத்தில்தான் என்பது புராண வரலாறு.

Advertisement

ஸ்ரீகார்கோடேசுவரருக்கு ஸ்ரீசௌந்தரேசுவரர் என்ற திருநாமமும் உண்டு. இறைவியின் திருநாமம் ஸ்ரீபாலாம்பிகை. அப்பர் பெருமான் போற்றிய வைப்புத் தலங்களில் காமரசவல்லி 70வது தலமாக விளங்குகிறது. இதே தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் வேண்டிய வரங்களை வழங்குபவர். இவரை வழிபட தோல் வியாதிகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொன்மையான கோயில்.

சோழ மன்னர்களில் பராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு. பின்னர் சுந்தர சோழன் காலத்தில் இக்கோயில் கற்கோயிலாகக் கட்டப்பட்டு வழிபாடுகள் தொடங்கின. முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன், போசள மன்னன் வீரசோமேசுவரன் ஆகியோர் இக்கோயிலைப் போற்றி, சிறப்பு வழிபாடுகள் நடக்க தானங்கள் அளித்தனர் என்பதையும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்கும் மற்றும் இவ்வூரில் உள்ள ஒன்பது திருக்கோயில்களுக்கும் பிப்: 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

பிப்: 9ஆம் தேதி காலை 7 மணி அளவில் ஸ்ரீவிநாயகர், காளியம்மன் ஸ்ரீமாரியம்மன், திரௌபதி அம்மன், செல்லி அம்மன், ஸ்ரீசெங்கமல ஆண்டவர் திருக்கோயில்களுக்கும் தொடர்ந்து காலை 8.45 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும்,

பிப்: 10ஆம் தேதி ஸ்ரீபாலாம்பிகா சமேத ஸ்ரீகார்கோடேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.