பாபங்களை நீக்கி முக்தியளிக்கும் களம்பூர் ஸ்ரீ காசி விஸ்வநாதர்
பாரத பூமியில், காசி, காஞ்சி, மதுரா, ராமேஸ்வரம், அயோத்தி, ஹரித்துவாரம், துவாரகை ஆகியவை முக்தி தரும் புண்ணிய ஸ்தலங்களாக விளங்குகின்றன. இதில் முதன்மை பெற்றது காசி விஸ்வநாதர்
பாரத பூமியில், காசி, காஞ்சி, மதுரா, ராமேஸ்வரம், அயோத்தி, ஹரித்துவாரம், துவாரகை ஆகியவை முக்தி தரும் புண்ணிய ஸ்தலங்களாக விளங்குகின்றன. இதில் முதன்மை பெற்றது காசி விஸ்வநாதர் ஆலயம்.
காசி விஸ்வநாதரை நினைத்தாலே முக்தி! உணர்ந்தால், வசித்தால், காண்பதால், உரைத்தால், திருநாமம் சொல்வதால் என எல்லாமே முக்தி! இந்த முக்தி நிலையை உணர்ந்த பாணாசூரன் என்ற அரசன்
களம்பூர் தலத்தில் காசி விஸ்வநாதருக்கு திருக்கோயில் அமைத்து இறைவனை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். இறைவன் பாணலிங்கத் திருமேனி உடையவர். இத்திருமேனி காசி கங்கையான புண்ணிய நதியிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்.
கிழக்கு நோக்கிய ஆலயம்! கருவறையில் இறைவன் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்க, ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பாள் தெற்கு முகமாக அமைந்து அருள் நல்குகிறார். மகாமண்டபம், அலங்கார
மண்டபம், நந்தி, துவஜஸ்தம்பம், பலிபீடமும், திருச்சுற்று பிரகாரத்தில், ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், நவக்கிரக மண்டபம் ஆகியவை முறையே அமைந்துள்ளன. திருக்கோயிலின் கட்டட அமைப்பு மற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ள பாணி இவற்றைக் கொண்டு, சுமார் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது.
ஆலயத்தின் தென் மேற்கு பகுதியில் தீர்த்த குளம் அமைந்துள்ளது. ஆனால் மிகப் பழங்காலத்துக்கு முன்பாக, திருக்கோயிலுக்கு வடகிழக்கில் இருந்ததாகச் சொல்லப்படும் ஒரு திருக்குளம் தற்போது இல்லை.
இவ்வாலயம், வடக்கிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு நிகரான ஆலயமாகத் திகழ்கின்றது. இத்தல இறைவன் காசியிலுள்ள ஸ்ரீ விஸ்வநாதரைப் போன்று பாபங்களைப் போக்கி முக்தி அளிக்க வல்லவர். திருமணவரம், புத்திரப் பேறு வேண்டுபவர்கள் இத்திருக்கோயிலில் மனமொன்றி ஆத்மார்த்தமாக வழிபட்டால் வேண்டிய பலனை அடைவர். புத்திர பேறு வேண்டுபவர்கள், இறைவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர பாக்கியம் பெறுவர்.
களம்பூர் திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம் போளூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் ஆரணியிலிருந்து 10 கி.மீ, படவேடுலிருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.