ஒரே சிந்தையுடன் செயல்படுவோம்!
ஒருநாள், மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்த ஒரு மனிதனிடம் அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அந்த மனிதன் சோர்வுடன் இருக்கும் காரணத்தை கேட்டார்.
ஒருநாள், மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்த ஒரு மனிதனிடம் அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அந்த மனிதன் சோர்வுடன் இருக்கும் காரணத்தை கேட்டார். "என் வயலுக்கு நீர் பாய்ச்ச கிணறு தோண்டினேன். ஆனால் தண்ணீர் கிடைக்காததால் விரக்தியடைந்து கவலையுடன் உள்ளேன்' என்று சொன்னார்.
இதைக்கேட்ட அந்த பெரியவர், தோண்டிய இடத்தை காண்பிக்குமாறு கூறி அம்மனிதனுடன் சென்றார். தண்ணீருக்காக சுமார் 15 அடி தோண்டிய பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குழிகளை அங்கு கண்ட பெரியவர் அவனின் தோல்விக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மனிதனை அழைத்து "தம்பி நீ தண்ணீருக்காக பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இடத்தை தோண்டியிருக்கிறாய், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 15 அடி தோண்டியிருக்கிறாய். அதாவது, நீ மொத்தம் 12 இடங்களில் தோண்டியது சுமார் 180 அடியிருக்கும்; ஆனால் நீ 12 இடத்தில் தோண்டினதை ஒரே இடத்தில் தோண்டியிருந்தால் நிச்சயமாக நல்ல தண்ணீர் உனக்கு கிடைத்திருக்கும்' என்று
அறிவுரை வழங்கினார்.
பெரியவரின் அறிவுரையின்படி, ஒரே இடத்தில் தன் எல்லா உழைப்பையும் பயன்படுத்தி தோண்ட துவங்கினார் அம்மனிதன். சில நாள்களில் அம்மனிதனுக்கு நல்ல நீர் கிடைத்தது. அதன்மூலம் அவன் செய்துவந்த விவசாயம் செழித்தது மட்டுமல்லாமல் சுற்றியிருந்த கிராமங்களில் உள்ளவர்களுக்கும் இந்த நீரை கொடுத்தார். எனவே அந்த கிராமங்களும் செழித்தன.
பரிசுத்த வேதாகமத்தில், "இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.' (யாக்கோபு 1:8) என்றும், "ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக' (பிலிப்பியர் 3:16) என்றும் வாசிக்கிறோம்.
எனவே, நாமும்கூட பல நேரங்களில் நம் உழைப்பை பல இடத்தில் பல விஷயங்களுக்காக செலுத்தி வீணடித்துவிட்டு ஒரு பலனும் இல்லாமல் துக்கத்துடன் இருக்கலாம். இன்று முதல் நம் லட்சியத்திற்கு நேராக ஒரே சிந்தையுடன் செயல்படுவோம், வெற்றிகளை குவிப்போம்! அந்த வெற்றி நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
"தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலை வரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்' (சங்கீதம் 51:10) என்று தாவீது கேட்டதுபோல தேவனிடம் கேட்போம். அவர் நாம் செய்யும் எல்லா காரியங்களையும் வாய்க்கச் செய்வார்.