முகப்பு
வெள்ளிமணி

குவலயம் போற்றும் குடந்தை மாசி மகம்!  

திருக்கைலாயத்தில் பார்வதி தேவி ஈசனை வணங்கி உலக இயக்கத்தின் தத்துவத்தை கூறும்படி கேட்டாள்.

Updated On : 12 பிப்ரவரி, 2021 at 11:44 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:00 AM

திருக்கைலாயத்தில் பார்வதி தேவி ஈசனை வணங்கி உலக இயக்கத்தின் தத்துவத்தை கூறும்படி கேட்டாள். அதற்கு கைலாயபதி "உருவம், பெயர், குணம், செயல் அற்ற நாம் இணைந்து  ஓர்சக்தியாகி உருவமற்ற நிலையில் செயல்படுகிறோம்; இதனால் அண்டசராசரங்கள் இயங்குகிறது'' என்றார். அதற்கு உடன் படாத சக்தி "தன்னால் மட்டுமே இவ்வுலகு இயங்குகிறது' எனச் சற்றுப் பெருமைப்பட்டாள். 

ஈசன் தனித்து நின்றார். உலக இயக்கம் நின்றது. அம்பிகை தன் தவறை உணர்ந்தாள். ஆனால் சிறுதுளி நேரம் அண்டசராசர இயக்கமும் நின்ற பாவத்தின் காரணமாகவும், சிவனார், தட்ச பிரஜாபதிக்கு தான் அளித்த வரத்தின் பயனாகவும், யமுனை நதியில் தன்னை நோக்கித்தவம் செய்ய சக்தியைப் பணித்தார். 

அதனை ஏற்று உலகநாயகியும் யமுனை நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரி சங்கு வடிவில் தவமிருந்தாள். ஒரு மாசி மக நன்னாளில் தட்ச பிரஜாபதி தன் மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடும்போது, அங்குள்ள தாமரை மலரில் இருந்த வலம்புரி சங்கினை எடுத்த போது அது பெண்ணாக உருமாறியது. அந்தப் பெண்ணைத் தன் குழந்தையாக எடுத்து வந்து, "தாட்சாயிணி' என பெயரிட்டு வளர்த்து வந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. இந்த நாளையே வடநாட்டில் "கும்பமேளா' என மிக விமரிசையாகக் கொண்டாடி, புனித நீர்நிலைகளில் நீராடுகின்றனர். 

Advertisement

மாசி மகத்திற்கு புராண, சரித்திர பின்னணியுள்ளது: இப்பூவுலகை நிர்மாணிக்கும் எண்ணம் சிவனாரிடம் தோன்றியவுடன் பிரம்மாவிடம் இதுபற்றிய தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதன்படி ஒரு கும்ப கலசத்தில் சக்திமிக்க அமிர்தத்தை மஹாமேருவின் உச்சியில் வைத்தால் இவ்வுலகம் உருவாகும் என்றார். அதன்படி செய்யும்போது, அமிர்தத்துடன் கூடிய அந்த கும்ப கலசத்தில் உள்ள அனைத்து பொருள்களும் கீழே சாய்ந்து, "பஞ்சக்ரோச' தொலைவு(சுமார் ஐந்து மைல்) பரப்பளவிற்கு பரவியது. அந்த இடமே பெருமைமிகு கும்பகோணம் ஆயிற்று. 

அதன் பின்னர் பிரம்மன், ஸ்ரீகும்பேஸ்வரரை பூஜிக்க, மாசி மக நாளை தேர்வு செய்து பூர்வ பட்சத்தில் வரும் அசுவினி நட்சத்திரத்தில் காவிரியில் நீராடி, ஒன்பது நாள் விரதமிருந்து, பூஜை செய்து பத்தாம் நாள் மாசி மகத்தன்று மகா மகக்குளத்தில் தீர்த்தவாரி செய்ததாகவும், அந்த நாளையே "மாசி மக விழா' எனவும் அழைக்கின்றனர். 

மாசி மாத மக நட்சத்திர நாளில், கும்ப ராசியில் சூரியன் இருக்கும்போது, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். அந்த நாளே "மாசி மகம்' எனவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. "மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வர்' என்று ஜோதிடத்தில் கூறுவர். மக நட்சத்திரம், நவ கிரகங்களில் ஞான காரகரான கேதுவுக்குரிய நட்சத்திரமாகும். இந்த நாளில் விரதமிருந்தால் ஞானம் பெருகுவதோடு, இக பர சுகத்துடன் கூடிய மோட்சம் மற்றும் பிறவா வரத்தை கேது பகவான் தருவார் எனவும் கூறப்படுகிறது.

மகாமக குளத்தில் மாசி மகத்தன்று நீராடினால், பாரதத்திலுள்ள அனைத்து நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும் என்பது ஐதீகம். இந்த மகாமக குளத்தில் வாயு தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், யமுனை தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம்,  நர்மதா தீர்த்தம், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவேரி தீர்த்தம், நாக தீர்த்தம், குமரி தீர்த்தம், த்ருதி தீர்த்தம், பயோனிஷி (பாலாறு) தீர்த்தம், தேவ தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், கன்யா தீர்த்தம் உள்பட மொத்தம் 20 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. மாசிமகத்தன்று இங்குள்ள அனைத்து சிவ, வைணவ ஆலய உற்சவ மூர்த்திகளும் இக்குளக்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதனைக் காணக்கண்கோடி வேண்டும். 

இப்படி இதன் சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம் அத்தனை சிறப்புமிக்கத் தலம் கும்பகோணம் ஆகும். இவ்வாண்டு மாசி மகம் பிப்ரவரி 27}ஆம் தேதி சனிக்கிழமையில், பெüர்ணமியும் சேர்ந்தே வருகிறது. இப்போதே திட்டமிட்டு இந்த நாளில் கும்பகோணம் சென்று புனித நீராடுவோம். அவ்வாறு செல்ல இயலாதவர்கள், அருகிலுள்ள புனித நீர்நிலைகள் மற்றும் சமுத்திரத்தில் நீராடி இக பர பேரின்பத்தினை அடையலாம். தர்மத்தின் மேன்மையை உணர்வோம்; அவ்வழி நடப்போம். 

- எஸ். எஸ். சீதாராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.