முகப்பு
வெள்ளிமணி

பிள்ளைச் செல்வங்கள் நம் இதயத்தின் கனிகள்!

ஒருமுறை முஆவியா (ரலி) அவர்கள் அஹ்னப பின் கைஸ் (ரலி) அவர்களிடம், "பிள்ளைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன?'  என்று கேட்டார்கள். 

பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:54 AM

ஒருமுறை முஆவியா (ரலி) அவர்கள் அஹ்னப பின் கைஸ் (ரலி) அவர்களிடம், "பிள்ளைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன?'  என்று கேட்டார்கள். 

அதற்கு கைஸ் (ரலி) அவர்கள், "அமீருல் மூஃமினின் அவர்களே!  பிள்ளைச் செல்வங்கள் நமது இதயத்தின் கனிகள்; நாம் இளைப்பாறும் ஸ்தலம்.  நாம் அவர்களுக்கு மிருதுவான, தீங்கு இழைக்காத பூமியைப் போன்றவர்கள். நமது ஜீவியம் அவர்களுக்கு நிழல் தர வேண்டும். அவர்களை நம் நற்செயல்களின் வாரிசுகளாக ஆக்க வேண்டும்.

அவர்கள் உங்களிடம் ஏதேனும் கேட்டால், நிரம்பக் கொடுங்கள்.  அவர்கள் கவலையுற்று மனச்சோர்வடையும்போது, உற்சாக வார்த்தைகளைக் கூறி மகிழ்வியுங்கள். அவர்கள் மீது தாங்க இயலாத சுமைகளைச் சுமத்தாதீர்கள். அவர்கள் உங்களிடம் நெருங்க முடியாத அளவு வெறுப்பைக் காட்டாதீர்கள். நீங்கள் மரணித்த பின் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் அளவுக்கு அன்பைப் பொழிவதோடு, அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்க வேண்டிய ஒழுக்கப் பயிற்சியையும் கொடுங்கள். நீங்கள் எந்த தீயச் செயல்களை உங்கள் பிள்ளைகளிடம் வெறுக்கிறீர்களோ, அதனை நீங்களும் நீக்கிக் கொள்ளுங்கள். எந்த நல்ல செயலை அவர்களிடம் விரும்புகிறீர்களோ, அதனை நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள்.

Advertisement

இதனைக் கேட்ட முஆவியா (ரலி) அவர்கள், "அஹ்னஃப்... நீங்கள் என்னிடம் வந்தமர்ந்தபோது, நான் என் மகன் யஜிதீயிடம் கோபத்தோடு இருந்தேன். இப்போது அது நீங்கிவிட்டது' என்றார்கள். 

தற்பெருமையை வெளிக்காட்டும் விதமாக பிள்ளைகளை வளர்த்தல் கூடாது. பிறரைக் குறைவாக மதிக்கும்படி அவர்களைப் பயிற்றுவிக்கக் கூடாது. பின்னாளில் உண்மையை உணரும்போது பெற்றோர்கள் மீது கண்ணியம் இருக்காது.

நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்கள் வரலாறுகளைப் படிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  அதன்மூலம் அவர்கள் நல்லுணர்வு பெறுவார்கள்.

நம்முடைய பிள்ளைகள் உலக வேடிக்கை விளையாட்டுகளுக்காக கொடுக்கப்படவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தை அறியும்படி அவர்களை ஆக்குவது பெற்றோரின் பொறுப்பாகும். இதுகுறித்து மறுமையில் விசாரணை உண்டு.

தன் வேலையை தன் கையால் செய்து கொள்ளும்படி பிள்ளைகளைப் பழக்க வேண்டும். பெற்றோரோ அல்லது வேலைக்காரர்களோ அவர்களது வேலையைச் செய்து விட்டால், அப்பிள்ளைகள் சோம்பேறிகளாக ஆவதுடன் எந்த ஒன்றுக்கும் பிறரை எதிர்பார்த்தவர்களாக ஆகிவிடுவர்.

வயதில் பெரியவர்களிடம் மரியாதையுடன் பேசும் பழக்கத்தை முக்கியமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அது இக்காலத்தில் குறைந்து கொண்டே போகிறது. பிள்ளைகளைப் பிறர் முன் தவறாக விமர்சிக்கக்கூடாது. பெற்றோர், பிள்ளைகளைச் சரிசமமாக நடத்த வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அன்பு, பாசம் ஆகியவை அவர்களின் நடத்தையைப் பொருத்து வேறுபடலாம்.  ஆனால், பொருள் விஷயங்களில் சமமாகவே பங்கிட வேண்டும்.

பிள்ளைகளை ஆலிம்களிடம் அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்களிடம் சென்று அணுகி விளக்கம் பெறும்படி பழக்க வேண்டும்.

பெண் பிள்ளைகளை மட்டமாக நடத்தும் பழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.  பெண் பிள்ளைகள்தான் வீட்டின் ரஹ்மத் (செல்வம்). எனவே, அவர்களிடம் கருணையோடும், பரிவோடும் நடந்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.