வெள்ளிமணி

பாட்டையே துடுப்பாக்கி ஓடம் செலுத்திய ஞான சம்பந்தர்!

திருக்கொள்ளம்பூதூர் என்ற தலம் திருவாரூர் மாவட்டம்  குடவாசலை அடுத்த கொரடாச்சேரிக்கு அருகில், காவிரி தென் கரையில் உள்ளது.

தினமணி


திருக்கொள்ளம்பூதூர் என்ற தலம் திருவாரூர் மாவட்டம்  குடவாசலை அடுத்த கொரடாச்சேரிக்கு அருகில், காவிரி தென் கரையில் உள்ளது.  "திருக்களம்பூர்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் எதிர்க் கரையில் ஞானசம்பந்தர் கோயில் உள்ளது.

திருஞானசம்பந்தர்  அடியார்களுடன் சோழநாட்டுத் தலங்கள் பலவற்றையும் தரிசித்து, முள்ளியாற்றின் கரையை அடைந்தார். முள்ளியாற்றில் வெள்ளம் பெருகி வர,  ஓடத்தைச் செலுத்துபவர்கள் கரையில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டனர்.

ஆற்றின் எதிர்க் கரையில் உள்ள வில்வாரண்யேஸ்வரர் கோயிலைத் தரிசிக்க  விருப்பம் கொண்ட சம்பந்தர்,  ஓடத்தைச்   செலுத்து பவர்கள்  யாரும் இல்லாத காரணத்தால், தானே  ஓடத்தைக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து, அடியார்களையும் ஏற்றிக்கொண்டு, "கொட்டமே கமழும்' என்ற பதிகத்தைப் பாட,  இறைவன் திருவருளால் ஓடம் மெதுவாகச் சென்று கொள்ளம்பூதூரை அடைந்தது.

கொட்ட மேகமழும் கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்க உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே                   
கொன்றை சேர்சடை யான் கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்று சொல் மாலைகொண்டு ஏத்தவல்     லார்போய்
என்றும் வானவ ரோடுஇருப் பாரே.
இறைவன்  வில்வாரண்யேஸ்வர்ரைத்  தரிசித்து திரும்பவும் ஓடத்தில்  ஏறி கரை சேர்ந்தார். இந்த அற்புதம் ஐப்பசி அமாவாசையை ஒட்டி ஓடத் திருவிழாவாக இவ்வாண்டு  நவ. 13}இல் நடைபெறுகிறது.

இறைவன்: வில்வாரண்யேஸ்வரர், இறைவி: செüந்தரநாயகி. சம்பந்தர் பாடல் பெற்றது. விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேஷன், அகத்தியர், பிருகு முனிவர் உள்பட பலர் வழிபட்ட தலம். தல புராணம் உள்ளது.
நீணிலை கோபுரமதனை இறைஞ்சிப் புக்கு
நிகரிலாத் தொண்டருடன் நெருங்கச்  சென்று
வாணிலவு கோயிலினை வலங்கொண்டு
                                   எய்தி
மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று
தாணுவே ஆற்றின்கண் ஓடம் உய்க்கும்
தன்மையால் அருள்தந்த தலைவா நாகப்
பூணினாய் களிற்றுருவைபோர்த்த முக்கட்
புனிதனே எனப்பணிந்து போற்றி
                                 செய்தார்.    
பெரிய புராணம்,
திருஞானசம்பந்தர் புராணம் }  900
பிணங்களை நீரெதிர் ஓடஞ் செலுத்தின  வெண்பிறையோடு
இணங்கிய மாடச் சிரபுரத் தான் தன் இருந்தமிழே!
நம்பியாண்டார் நம்பி,
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
கும்பகோணம் } குடவாசல் சாலையில் உள்ள இந்தக் கோயில் சிறப்புமிக்கது. இங்கு தரிசித்து அருள் பெறுவோம்.
                           

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT