தென்கொரிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்கு அதிபர் அலுவலகம் மன்னிப்பு கோரி உள்ளது.
தென்கொரிய அதிபர் பார்க் கியூன்-ஹையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்கு அதிபர் அலுவலகம் மன்னிப்பு கோரி உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரிய அதிபராக பொறுப்பேற்ற பார்க் முதன்முறையாக கடந்த வாரம் (மே 5 - 9) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். இந்தப் பயணத்தின்போது, அவருடன் சென்றிருந்த செய்தித் தொடர்பாளர் யூன் சாங்-ஜங், கொரிய அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாடு திரும்புவதற்கு முன்பே யூன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அதிபர் அலுவலக தலைமை அதிகாரி ஹியூ டே-இயோல் செய்தியாளர்களிடம் கூறியது:
Advertisement
Advertisement
யூன் தலைகுனிவை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார். அது ஒரு வெட்கக்கேடான சம்பவம். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். மேலும் நாட்டு மக்களிடமும், வெளிநாடுகளில் வசிக்கும் கொரிய மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, அதிபரின் தலைமை செய்தித் தொடர்பாளர் லீ நாம்-கியூம் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார் என அந்த அதிகாரி தெரிவித்தார். எனினும், அது ஏற்கப்பட்டதா என்பதை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக வாஷிங்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர். யூன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.