ராணி எலிசபெத் இறந்துவிட்டதாக பிபிசி நிருபரின் தவறான ட்வீட்டால் பரபரப்பு!
இரங்கல் செய்தி தொடர்பாக பிபிசியில் நடந்த ஒத்திகையின்போது கவாஜா தவறுதலாக இப்படி ட்வீட் செய்துவிட்டார்...
பிரிட்டன் ராணி எலிசபெத் இறந்துவிட்டதாக பிபிசி நிருபர் ஒருவர் தவறுதலாக ட்வீட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிபிசி பெண் செய்தியாளர் அஹ்மன் கவாஜா தன் ட்விட்டர் பக்கத்தில், ராணி எலிசபெத் இறந்துவிட்டார் என்று எழுதினார். பிறகு, ராணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ட்வீட் செய்தார். இவர் பிபிசி நிருபர் என்பதால் உலகம் முழுக்க உள்ள பலரும் அவரைத் தொடர்கிறார்கள். இந்த ட்வீட்களைப் பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். பிபிசி நிருபர் தவறுதலாக ட்வீட் செய்யமாட்டார் என்று நம்பியதால் பலரும் ராணி இறந்துவிட்டார் என்றே நம்பினார்கள்.
பிறகுதான் தெரிந்தது, இரங்கல் செய்தி தொடர்பாக பிபிசியில் நடந்த ஒத்திகையின்போது கவாஜா தவறுதலாக இப்படி ட்வீட் செய்துவிட்டார் என்று. தன் தவறை உணர்ந்தபிறகு உடனே கவாஜா அந்த ட்வீட்களை நீக்கிவிட்டார். அதற்குள் இந்தச் செய்தி உலகம் முழுக்கப் பரவிவிட்டது. கவாஜாவின் இந்தத் தவறான நடவடிக்கையால் பிபிசியும் அரண்மனை நிர்வாகமும் விளக்கம் அளிக்கவேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள்.
Advertisement
'இரங்கல் செய்தி தொடர்பான ஒத்திகையின்போது, பிபிசி நிருபர் தவறுதலாக ட்வீட் செய்துவிட்டார். அந்த ட்வீட்கள் நீக்கப்பட்டுவிட்டன. இதற்காக மன்னிப்பு கோருகிறோம்’ என்று பிபிசி தரப்பு விளக்கம் அளித்தது. இந்தத் தவறுதலான ட்வீட்டால் பக்கிங்ஹாம் அரண்மனையும் ராணி நலமாக உள்ளார் என விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. 'ராணி நலமுடன் உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்று, அரண்மனைக்கு திரும்பி விட்டார்' என்று அறிக்கை வெளியிட்டது.