தென் கொரியாவில் அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ள வான் பாதுகாப்பு தளவாடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாவது:
கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் பதற்ற நிலை விரைவிலேயே மாறி இயல்பு நிலை திரும்ப வேண்டும். அதற்காக அனைத்துத் தரப்பினரும் அவரவர் இயன்ற வரையில் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தென் கொரியாவில் வான் பாதுகாப்பு ஏவுகணை தளவாடம் அமைக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக அகற்ற வேண்டும். அமைதியில் அக்கறை காட்டும் விதமாக அதனைச் செய்ய வேண்டும். எங்களுடைய நலன் கருதி, தேவைப்படும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் உறுதியாக எடுப்போம் என்றார் அவர்.
தென் கொரியாவில் அமெரிக்கா ஈடுபடுத்தியுள்ள வான் பாதுகாப்பு தளவாடம், பிராந்திய அமைதிக்கு ஊறு விளைவிக்கும் என்று சீனா கூறி வருகிறது. அமெரிக்காவுடன் நேரடியாக மோத விரும்பாத சீனா, தங்கள் நாட்டில் செயல்படும் தென் கொரிய நிறுவனங்கள் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.