‘பனாமா ஆவணங்கள்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் நீதிமன்றத்தில் ஆஜர்!
உலக அளவில் பிரபலமான 'பனாமா ஆவணங்கள்' ஊழல் வழக்கு விசாரணைக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இஸ்லாமாபாத்: உலக அளவில் பிரபலமான 'பனாமா ஆவணங்கள்' ஊழல் வழக்கு விசாரணைக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்து சொகுசுத் தீவில் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பது தொடர்பான ஆவணங்கள் 'பனாமா ஆவணங்கள்' என்ற பெயரில் வெளியாகி பரபரப்பினைக் கிளப்பியது.
இந்த ஆவணங்களில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் குடும்பத்தினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
Advertisement
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி அவர் பதவி விலகினார். அவர் மீது விரிவான விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன்கள் அனுப்பப்பட்து. ஆனாலும் தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாததால் லண்டன் சென்ற அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது கடந்த 26-ம் தேதி ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணைக்காக அவர் நேற்று பாகிஸ்தான் திரும்பினார். இன்று பலத்த பாதுகாப்புக்கிடையே நவாஸ் ஷெரிப் நீதிமன்றத்தில் ஆஜரானார். நவாஸ் ஷெரிப்புடன் அவரது மகள் மரியமும் வந்தார்.