முகப்பு
உலகம்

ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒன்பது பிணங்கள்: துண்டு துண்டுகளாக வெட்டி வைத்திருந்த ஜப்பானின் 'ஆட்டோ சங்கர்'! 

ஜப்பான் நாட்டு இளைஞர் ஒருவர் தன்னுடைய அபார்ட்மெண்ட்டில் ஒன்பது பேரைக் கொன்று, அவர்களது பிணங்களை துண்டு துண்டுகளாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Updated On : 10 நவம்பர், 2017 at 4:45 PM
பகிர்:

டோக்கியோ: ஜப்பான் நாட்டு இளைஞர் ஒருவர் தன்னுடைய அபார்ட்மெண்ட்டில் ஒன்பது பேரைக் கொன்று, அவர்களது பிணங்களை துண்டு துண்டுகளாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவைச் சேர்ந்த இளம்பெண் அய்க்கோ தமுரா(23). சில நாட்களுக்கு முன் இவர் மர்மமாக காணாமல் போனார். அது பற்றிய விசாரணையில் இறங்கிய போலீசார், அவர் காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்னால் தனது டிவிட்டர் பக்கத்தில் 'யாருடனாவது சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக'  தெரிவித்திருந்ததைக் கண்டறிந்தனர். அதற்கு இளைஞர் ஒருவர் , 'நாம் சேர்ந்து தற்கொலை செய்யலாம்' என்று பதிலளித்திருந்த தகவலும் அவர்களுக்கு தெரிய வந்தது.

உடனடியாக அது பற்றிய விசாரணையில் இறங்கிய போலீசார் டகாஹிரோ சிரைஷி (27) என்ற ஜப்பான் இளைஞரை கடந்த மாத இறுதியில் கைது செய்தனர். பின்னர் அவரது அபார்ட்மென்ட்டினை நவம்பர் 30-ஆம் தேதி அன்று சோதனையிட்ட போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisement

அங்கு சிறிய அட்டைப் பெட்டிகளிலும், சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டிகளிலும் வெட்டப்பட்ட கை, கால்கள் மற்றும் தலை உள்ளிட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அத்துடன் ஆங்காங்கே என மொத்தம் 240 எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டன.

இதனைக் கண்டு  அதிர்ச்சியில் உறைந்த போலீசார் அது பற்றிய விசாரணையினைத் துவங்கினர். தற்பொழுது அந்த உடல் பாகங்கள் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு உரியது என்று டி.என்.ஏ சோதனையின் முடிவில் கண்டறிந்துள்ளனர். இவர்களில் மூன்று பெண்கள் பள்ளி மாணவிகள். அவர்களில் ஒரு பெண்ணின் காதலனும் இறந்தவர்களில் அடங்குவார்.. இதர அனைவரும் இளம் வயதினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதுபற்றிய விசாரணையில் பெரும்பாலும் பணத்துக்காகவும், பாலியல் தேவைக்காகவும் இந்த் கொலைகளில் ஈடுபட்டதாக , தற்பொழுது போலீஸ் பிடியில் உள்ள டகாஹிரோ சிரைஷி தெரிவித்தார். அத்துடன் இந்த அபார்ட்மென்ட்டுக்கு ஆகஸ்டில் குடி வந்ததிலிருந்து அக்டோபர் மாத இறுதி வரை  இந்த கொலைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

முதல் கொலையில் ஈடுபட்ட பொழுது பாகங்களை வெட்டித் துண்டாக்க மூன்று நாட்கள் ஆனதாக கூறிய அவர்,  பின்னர் ஒரு நாளிலேயே எளிதாக அதனை செய்ததாக கூறினார்.

இந்த தொடர் கொலைகள் காரணமாக ஜப்பான் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.