இந்தியாவில் சித்துவை விமர்சிப்பவர்கள் சமாதானத்திற்கு சேவை செய்யாதவர்கள்: இம்ரான் கான் கண்டனம்
இந்தியாவில் கிரிக்கெட் வீரர் சித்துவை விமர்சிப்பவர்கள் சமாதானத்திற்கு சேவை செய்யாதவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்: இந்தியாவில் கிரிக்கெட் வீரர் சித்துவை விமர்சிப்பவர்கள் சமாதானத்திற்கு சேவை செய்யாதவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ஒரே நபராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மட்டும் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி காமர் ஜாவத் பாஜ்வா - சித்து இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் அதிபர் மசூத் கானுக்கு அருகே சித்து அமர்ந்திருந்தார்.
இந்த நிகழ்வுகளால் இந்தியாவில் சித்துவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங்கும், சித்துவின் செயல் தவறு என்று கூறியிருந்தார்.
Advertisement
அதேசமயம் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை ஆரத்தழுவிய விவகாரம் தொடர்பாக சித்து மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரி பிகார் மாநிலம் முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது வரும் 24-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் வீரர் சித்துவை விமர்சிப்பவர்கள் சமாதானத்திற்கு சேவை செய்யாதவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
என்னுடைய பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக சிந்துவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஓரு சிறந்த சமாதானத் தூதுவர். பாகிஸ்தான் மக்கள் அவருக்கு சிறந்த அன்பையும் ப்ரியத்தையும் காண்பித்தனர். இந்தியாவில் கிரிக்கெட் வீரர் சித்துவை விமர்சிப்பவர்கள், துணைக்கண்டத்தில் சமாதானத்திற்கு சேவை செய்யாதவர்கள். சமாதானம் இல்லாமல் நமது மக்களுக்கு முன்னேற்றம் என்பது இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.