நிதிப் பற்றாக்குறையை குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதற்கு சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) வரவேற்பு தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ஐஎம்எஃப் செய்தித் தொடர்புத் துறை தலைவர் ஜெர்ரி ரைஸ் இது தொடர்பாகக் கூறியதாவது:
இந்தியாவில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தில் 3.3 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஐஎம்எஃப் வரவேற்கிறது. இதன் மூலம் இந்தியாவின் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை மேம்படும். எனவே, இந்தியா நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்ட ஐஎம்எஃப் உதவிகரமாக இருக்கும்.
இது தவிர இந்தியாவில் வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் இது மிகவும் சவாலானதுதான். வரி வருவாய் அதிகரிப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும், அது எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டும். வரி வசூல் இலக்கைவிடக் குறையவும் வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, மூலதன ஆக்கத்துக்கான நிதி குறைய வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு, 50 கோடி பேருக்கு இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பட்ஜெட்டில் இவை தொடர்பான நிதி ஒதுக்கீடு இல்லை என்றார் அவர்.