முகப்பு
உலகம்

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜிநாமா 

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை திடீர் என்று ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 6 ஜூலை, 2018 at 4:28 PM
பகிர்:

கொழும்பு: விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை திடீர் என்று ராஜிநாமா செய்துள்ளார்.

இலங்கை அரசில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர் விஜயகலா மகேஸ்வரன் (வயது45). இவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில், குழந்தைகள் நல விவகாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த திங்களன்று யாழ்பாணத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர், 'கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதிக்கு முன்பாக நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது. இப்போது பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இன்றைய சூழலில், வடக்கு மாநிலத்தில் மீண்டும் விடுதலைப்புலிகள் வர வேண்டும் என்பதேயே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது. நாம் வாழ விரும்பினால், சுதந்திரமாக நடமாட வேண்டும். நம்முடைய குழந்தைகள் சுதந்திராக பள்ளிக்குச்சென்று, உயிருடன் மீண்டும் வீட்டுக்கு திரும்ப வேண்டும். ஆனால், வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுவிட்டது” என்று பேசினார்.

Advertisement

அமைச்சரின் இந்த பேச்சு இலங்கை நாடாளுமன்றத்தில் வரை எதிரொலித்தது. அவரது பேச்சு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது; அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.அதேசமயம்  ஆளும் கட்சியில் உள்ள எம்.பி.க்களும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவாகப் பேசிய விஜயகலாவை  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அமைச்சர் விஜயகலாவின் பேச்சு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் விக்ரமசிங்கேவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த தருணத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அமைச்சரின் பேச்சு குறித்து அட்டர்னி ஜெனரல் விசாரிக்க வேண்டும். அவரது பேச்சு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் தனது அமைச்சர் பதவியை விஜயகலா மகேஸ்வரன் வியாழன் மாலை ராஜிநாமா செய்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'வியாழன் மாலை பிரதமருடனான சந்திப்புக்குப்பின் என்னுடைய ராஜிநாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்துவிட்டேன்' என்று உறுதி செய்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.