முகப்பு
உலகம்

பிரிட்டன்: பிரெக்ஸிட் அமைச்சர் திடீர் ராஜிநாமா

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத்துக்கு

Updated On : 10 ஜூலை, 2018 at 1:01 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) விவகாரத்தில், பிரதமர் தெரசா மேவின் கொள்கை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரெக்ஸிட் விவகாரத் துறை அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமான முறையில் கையாள்கிறது.
பிரெக்ஸிட் நடவடிக்கையின்போது பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பேரங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே, எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனியலிருந்து பிரிந்தாலும், அதன் உறுப்பு நாடுகளுடன் தளர்வான ஏற்றுமதி - இறக்குமதி கொள்கை, பொது வர்த்தகச் சந்தை ஆகியவற்றைப் பின்பற்றுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு பரிசீலித்து வருகிறது.
மிதமான பிரெக்ஸிட்' என்றழைக்கப்படும் இதுபோன்ற கொள்கைகளுக்கு பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் டேவிஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், தெரசா மே தலைமையிலான அரசை கவிழ்க்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராஜிநாமா ஏற்பு: இதற்கிடையே, டேவிட் டேவிஸின் ராஜிநாமாவை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், புதிய பிரெக்ஸிட் அமைச்சரின் பெயரை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
எனினும், ஐரோப்பியா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.