முகப்பு
உலகம்

தனக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கு தானே சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய செவிலியர்

தனக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பின்போது உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் தானே சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய விநோதம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

Updated On : 8 மார்ச், 2018 at 4:11 PM
பகிர்:

மியாமி: தனக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பின்போது உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் தானே சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய விநோதம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

புறநகர் பகுதியில் மிகச் சிறிய மருத்துவ மையத்தில் வேறு யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் செவிலியராக பணியாற்றிக் கொண்டிருந்த 44 வயது நபருக்கு திடீரென நெஞ்சுவலி மற்றும் நடுக்கம் ஏற்பட்டது.

அருகில் இருக்கும் ஏதேனும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.

Advertisement

உடனடியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ஆம், தனது உயிரை தானே காப்பாற்றிக் கொள்வது என்பதுதான் அது. முதலில் தனக்கு ஈகேஜி எனப்படும் எலக்ட்ரோகார்டியோகிராம் செய்தார். அதில் இதய அடைப்பு இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் மாரடைப்பு ஏற்பட்டிருப்பதையும் அது காட்டியது.

மீண்டும் ஒரு முறை எலக்ட்ரோகார்டியோகிராம் செய்தபோது, மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை அந்த இயந்திரம் உறுதி செய்தது.

இவ்விரண்டு பரிசோதனை முடிவுகளையும் அவசரகால தொலைத்தொடர்பு மருத்துவ சேவைக்கு மின்னஞ்சல் செய்தார். அங்கிருந்து மருத்துவர்கள் விடியோ கான்பரன்சிங்கில் வந்து அவருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளைக் கூறினர்.

தனக்குத் தானே இரண்டு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றி, அதில் ஆஸ்பிரின், பிளட் தின்னர்ஸ், வலி நிவாரணிகள், ரத்த நாள அடைப்பை சரி செய்வதற்கான மருந்துகளை செலுத்தினார்.

மேலும் மாரடைப்புக்கான மருந்துகளையும் அவர் செலுத்திக் கொண்டார். ரத்த நாள அடைப்பை உடைக்கும் அந்த மருந்து வேலை செய்தது. அடைப்பு உடைந்து தூள் தூளானது. மாரடைப்பும் குணமானது. பிறகு உடல்நிலை சீரானதும், பெர்த் நகரில் உள்ள இதய சிகிச்சைக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. 2 நாட்களுக்குப் பிறகு அவர் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பினார்.

இது குறித்து அறிந்த மருத்துவ நிபுணர்கள் பலரும், செவிலியரின் துணிச்சலான செயலை பாராட்டியுள்ளனர். அவசரகாலத்தில் சிறப்பாக பணியாற்றியதன் காரணமாகவே அவருக்கு இது கைவரப்பெற்றதாகவும் கூறினர்.

இது பற்றிய செய்தியைப் படித்த போது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி அடைந்ததாக சில மருத்துவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.