சுமார் 8 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் தேர்தல் கணிப்பு தகவல் சேவை நிறுவனம் அனுமதியின்றி திருடியதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல்களை அமெரிக்க தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதற்கு, பேஸ்புக்கை நிறுவி நடத்தி வரும் தாமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மார்க் ஸுகர்பெர்க் மன்னிப்பு கேட்டார்.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அமெரிக்காவில் உள்ள தனது அனைத்து அலுவலகங்களையும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடவுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற தொடர் தகவல் திருட்டுகள் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பானது அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேஸ்புக் தகவல் திருட்டுகளை தடுப்பதற்கான சரியான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கூட்டத்தின் சந்திப்பை தொடர்ந்து ஸுகர்பெர்க் பிரெஞ்சு அதிபர் எம்மானுவேல் மாக்ரானையும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.