முகப்பு
உலகம்

இந்தியா-ரஷியா உறவைப் பிரிக்க முடியாது: பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா-ரஷியா இடையேயான உறவைப் பிரிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 22 மே, 2018 at 5:30 AM
ரஷியாவின் சோச்சி நகரில் அதிபர் விளாதிமீர் புதினை திங்கள்கிழமை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:

இந்தியா-ரஷியா இடையேயான உறவைப் பிரிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடனான சந்திப்பின்போது, இந்த கருத்தை பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷியாவின் கருங்கடல் பகுதியில் உள்ள கடற்கரை நகரான சோச்சியில் அந்நாட்டு அதிபர் புதினை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கம், சிரியா விவகாரம், மத்திய கிழக்குப் பிரச்னை, கொரிய தீபகற்ப விவகாரம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், இந்தியா-ரஷியா இடையேயான இருதரப்பு உறவு குறித்தும் தலைவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது புதினிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவும், ரஷியாவும் நீண்டகாலமாக நட்பு நாடுகளாக உள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை யாராலும் பிரிக்க முடியாது. எனது இந்த ரஷிய பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்படாதது ஆகும். இந்தப் பயணத்துக்கு எனக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இருதரப்பு உறவில், திட்டமிடப்படாத சந்திப்பின் மூலம் புதிய வடிவை நீங்கள் கொடுத்துள்ளீர்கள். இதுவொரு சிறந்த நிகழ்வாகும். இது இரண்டு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
ரஷியாவுக்கு முதல்முறையாக கடந்த 2001-ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் நான் வந்தேன். எனது அரசியல் வாழ்க்கையில், ரஷியாவும், நீங்களும் (புதின்) மிகவும் முக்கியமானவர்கள் ஆவர். குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபிறகு, நான் சந்தித்த முதல் வெளிநாட்டுத் தலைவரும் நீங்கள்தான். எனது வெளிநாட்டு நட்புறவானது, ரஷியாவிடம் இருந்தும், உங்களிடம் இருந்தும்தான் தொடங்கின. அன்று முதல் கடந்த 18 ஆண்டுகளில், உங்களைச் சந்திப்பதற்கும், உங்களுடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும், இந்தியா-ரஷியா இடையேயான உறவை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை எடுப்பதற்கும் எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன.
இந்தியா-ரஷியா இடையே ராஜீய கூட்டுறவு ஏற்படுவதற்கான விதைகளை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான் தூவினார். அதை சிறப்பு-முக்கியமான ராஜீய கூட்டுறவாக அதிபர் புதின் தற்போது வளர்த்துள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்த்து கொள்ளப்பட முக்கிய பங்காற்றியதற்கு ரஷியாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து முனையத் திட்டம், பிரிக்ஸ் அமைப்பு ஆகியவற்றில் நமது இரு நாடுகளும் நெருங்கி செயல்பட்டு வருகின்றன. ரஷிய அதிபராக 4ஆவது முறையாக அதிக பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருக்கும் உங்களுக்கு (புதினுக்கு) எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஷிய அதிபராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டதும், உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தது, அதைத் தொடர்ந்து தற்போது நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
கடந்த 2000-ஆம் ஆண்டில் ரஷிய அதிபராக நீங்கள் பதவியேற்ற காலத்தில் இருந்து, இந்தியா-ரஷியா இடையேயான உறவு வரலாறாகி விட்டது என்றார் மோடி.
இதையடுத்து புதின் கூறுகையில், "சோச்சி நகருக்கு உங்களை வரவேற்கிறேன். உங்களது பயணத்தின் மூலம், இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. ரஷியா-இந்தியா பாதுகாப்பு அமைச்சகங்கள் தங்களிடையேயான நெருங்கிய தொடர்பையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து பராமரித்து வருகின்றன. இதுவே நமது நாடுகள் இடையே மிகப்பெரிய ராஜீய கூட்டுறவு நிலவுவதை தெரியப்படுத்தும். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருந்தது. அதேபோல், நிகழாண்டிலும் 17 சதவீதம் அதிகரித்துள்ளது' என்றார்.
சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திடீர் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ரஷியாவுக்கு சென்று புதினை சந்தித்துள்ளார். இந்த 2 பயணங்களும், முன்கூட்டியே இரு நாட்டு அரசுகளாலும் திட்டமிடப்படாத ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.