பாகிஸ்தான்: ஆப்கன் தலிபான்களின் முக்கியத் தலைவர் விடுதலை
ஆப்கன் தலிபான்களின் முன்னாள் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதாரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
ஆப்கன் தலிபான்களின் முன்னாள் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதாரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
கத்தார் நாட்டின் வேண்டுகோளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி நியூஸ் நாளிதழ் திங்கள்கிழமை கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது, அதன் 4 முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முல்லா அப்துல் கனி பரதார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படயெடுத்து தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, பாகிஸ்தானின் கராச்சி நகரில் பதுங்கியிருந்த அவரை பாதுகாப்புப் படையினர் கடந்த 2010-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
இந்த நிலையில், கத்தாரைச் சேர்ந்த தூதுக்குழுவினர் அண்மையில் பாகிஸ்தான் வந்து மூத்த தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, முல்லா அப்துல் கனி பரதாரை விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வேண்டுகோளை ஏற்று தற்போது பரதார் விடுதல செய்யப்பட்டுள்ளார் என்று தி நியூஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானால் விடுவிக்கப்பட்ட தலிபான் பயங்கரவாதிகளிலேயே, முல்லா அப்துல் கனி பரதார்தான் மிக உயர் நிலைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.