ஊழல் வழக்கு: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை
ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டாக்கா ஊழல் வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை'க்காக வெளிநாடுகளிலிருந்து 2.10 கோடி டாலரை (சுமார் ரூ.1.6 கோடி) முறைகேடாகப் பெற்றதாக, வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (72), அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக டாக்காவிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
கலீதா ஜியாவின் கணவரும், வங்கதேசத்தின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் மற்றும் அதிபருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயரிடப்பட்ட அந்த அறக்கட்டளை, ஏட்டளவில் மட்டுமே இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில் கலீதா ஜியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், தலைமறைவாகியுள்ள அவரது மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, உடல் நலக் குறைவு காரணமாக இம்மாத துவக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மற்றொரு ஊழல் வழக்கில் கலீதா ஜியாவுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஆதரவற்றோர் அறக்கட்டளைக்காக கிடைத்த தொகையை, இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.3 கோடியை கையாடல் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில்தான் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தணடனை விதித்து நீதிபதி அக்தர்சமான திங்களன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதுதவிர அவர் மீது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.