வங்கதேச பெண் செய்தியாளர் படுகொலை: மாமனார் கைது
வங்கதேசத்தில் பெண் செய்தியாளர் படுகொலை தொடர்பாக அவரது மாமனாரை போலீஸார் கைது செய்தனர்.
வங்கதேசத்தில் பெண் செய்தியாளர் படுகொலை தொடர்பாக அவரது மாமனாரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து டாக்கா டிரிபியூன்' நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செய்தியாளர் சுபர்ணா அக்தர் நோடி (32) படுகொலை தொடர்பாக, அவரது முன்னாள் மாமனாரும், தொழிலதிபருமான அபுல் ஹுசைனை போலீஸார் கைது செய்தனர்.
தற்போது அவர் பாப்னா மாவட்ட நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சுபர்ணாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.
தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த சுபர்ணா அக்தர் நோடி, பவ்னா மாவட்டத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் சுமார் 12 மர்ம நபர்களால் கடந்த வாரம் வெட்டிக் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் சீர்திருத்தக் கருத்துகளைக் கூறி வரும் ஊடகவியலாளர்கள் மதவெறியர்களால் வெட்டிக் கொல்லப்படுவது அடிக்கடி நடந்தாலும், இந்தக் கொலைக்கு சுபர்ணாவிடமிருந்து பிரிந்து வாழும் அவரது கணவரின் குடும்பத்தினர் காரணமாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.