உலக அளவில் கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் சுமார் 30 லட்சம் பேர் (அதிகப்படியான ஆண்கள்) மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உயிரை இழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
அதாவது, உலக அளவில் உயிரிழக்கும் 20 பேரில் ஒருவர் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கத்தால் உயிரிழந்தவர்களாகவே இருப்பதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது.
பல நாடுகளில் மிக மோசமான குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆண்களால் அவர்களைச் சேர்ந்த குடும்பம், சமுதாயம் மிக மோசமான விஷயங்களை அனுபவிக்கின்றன. குடிப்பழக்கத்தால் குடும்பங்களில் வன்முறை, தாக்குதல்களால் காயங்கள், மன நலன் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட மிக மோசமான நோய் தாக்குதல்கள் என அதன் பின்விளைவுகள் எண்ணற்றவையாக உள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் பொது மேலாளர் இது பற்றி கூறுகையில், உலக மக்களின் ஆரோக்கியமான சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய மிக முக்கியமான தருணத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
குடிப்பழக்கத்தால் உடல்நலன் பாதித்து உயிரிழப்பவர்களோடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்பு, மன நலன் பாதித்து தற்கொலை செய்து கொள்வது, குடித்துவிட்டு வன்முறைகளில் ஈடுபடுபவர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டும் 28% ஆகும். இதில்லாமல், குடிப்பழக்கத்தால் ஏற்படும் உடல் நலன் பாதிப்பு, புற்றுநோய் மற்றும் பிற பிரச்னைகளால் உயிரிழப்பு 21% ஆக இருக்கிறது என்கிறது அந்த புள்ளிவிவரம்.