ஜகார்தா: இந்தோனேசியாவில் 48 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் ஒருவர் இறுதியில் சரக்கு கப்பல் ஒன்றின் மூலம் மீட்கப்பட்ட கதை நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி கடற்கரை பகுதியில் உள்ள ஒரி என்ற ஊரைச் சேர்ந்தவர் அல்டி நாவல் அடிலங் (19). மீனவரான இவர் மீன்பிடி கப்பல்களுக்கான மரத்தாலான நடுக்கடல் 'மிதவை மீன்பிடிக் கூண்டு' பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மீனகளை ஈர்க்கும் பொருட்டு அந்த கூண்டுகளுக்கு ஒளி ஏற்றுவது இவருடைய பணி.
வாரத்திற்கு ஒருமுறை யாராவது வந்து இவருக்கான உணவு உள்ளிட்டவற்றை கொடுத்து விட்டு சேகரமாகி இருக்கும் மீன்களைப் பிடித்துச் செல்வார்கள். ஆனால் கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதியன்று அந்த மீன்பிடிக் கூண்டை நிலை நிறுத்தியிருக்கும் கயிறானது திடீரென்று அறுந்து விட்டது.
அந்த அமைப்பில் எஞ்சின் ஏதும் பொறுத்தப்படாத காரணத்தால் அது காற்றில் அடித்துச் செல்லப்பட ஆரம்பித்தது. ஆனால் அல்டியிடம் சூரிய சக்தியால் இயங்கும் ரேடியோ ஒன்றை வைத்திருந்தார். அதனைக் கொண்டு அந்தப் பகுதியில் செல்லும் 10-க்கும் மேற்பட்ட கப்பல்களைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் எதுவும் பலன் அளிக்கவில்லை.
இறுதியாக ஆகஸ்ட் 31-ஆம் தேதியன்று பனாமா நாட்டைச் சேர்ந்த எம்.வி அர்பிகியோ என்னும் சரக்கு கப்பலானது, அவரது ரேடியோ சிக்கலைக் கண்டறிந்து அவரை மீட்டது. அங்கிருந்து அவரை ஜப்பான் நாட்டுக்கு கொண்டு சென்றது. அங்கிருந்து அவர் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதியன்று இந்தோனேசியா வந்து சேர்ந்தார். அவரது இந்த மீட்புக் கதை அதிசயமான ஒன்றாகக் கருதப்படுகிறது. நல்ல உடல்நிலையில் இருக்கும் அவர் தற்போது தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.