பிரான்ஸ்: ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலக அரங்கில் இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளின் நிலை குறித்து கவலை இல்லை. இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று மோடி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னை. அதனை இரு நாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ளும் என்று டிரம்ப் கூறினார். காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மோடி தெரிவித்ததாகவும் டிரம்ப் கூறினார்.
இதுவரை ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று கூறி வந்த டிரம்ப், தற்போது காஷ்மீர் என்பது இருநாட்டு விவகாரம் என்று தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தின் முதல்கட்டமாக பிரான்ஸ் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகம், அதையடுத்து பஹ்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.
அந்த மாநாட்டையொட்டி இந்திய உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேச்சு நடத்தினார்.
முன்னதாக நடைபெற்ற சந்திப்புகள்
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
குட்டெரெஸுடன் பேச்சு: இதனிடையே, ஜி7 மாநாட்டையொட்டி ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியும், குட்டெரெஸும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும், அவர்களின் சந்திப்பு நல்ல முறையில் அமைந்ததாகவும் பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று குட்டெரெஸிடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி சனிக்கிழமை வலியுறுத்தியிருந்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க தாம் தயாராக இருப்பதாகவும், அதுதொடர்பாக ஜி7 மாநாட்டின்போது பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதாகவும் குட்டெரெஸ் அவருக்கு பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.