உலகம்

"ஈரான் தற்கொலைத் தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம்'

தினமணி

ஈரானில் அண்மையில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 27 வீரர்கள் பலியான சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரவளிப்பதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.
 ஈரானில் கடந்த புதன்கிழமை தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 27 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு காரணமான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆதரிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு அந்நாட்டு புரட்சிப் படைப் பிரிவு ராணுவ மேஜர் ஜெனரல் முகமது அலி ஜாப்ரி அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
 புரட்சிவாதிகளுக்கும், இஸ்லாமுக்கும் எதிரான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தந்துள்ளது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். அவர்களுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர்தான் ஆதரவளிக்கின்றனர்.
 தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு எதிராக ஈரானே நடவடிக்கை எடுக்க நேரிடும். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததற்காக பாகிஸ்தானும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் ' என்றார்.
 தற்கொலைப்படைத் தாக்குதலை ஜெய்ஷ் -அல்-ஆதில் என்ற பயங்கரவாத அமைப்பினர்தான் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறுகையில்," இந்த பிராந்தியத்திலுள்ள நாடுகள் மற்றும் பிற நாடுகளின் உளவு அமைப்புகள்தான், இந்தத் தாக்குதலுக்கு காரணம்' என்று பாகிஸ்தானை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
 ஜுன்டுல்லா என்ற அமைப்பிலிருந்து ஜெய்ஷ்-அல்-ஆதில் பயங்கரவாத அமைப்பு தோன்றியது. பாகிஸ்தானையொட்டிய ஈரானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜெய்ஷ்-அல்-ஆதில் தற்கொலைப் படை பயங்கரவாதிகள் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் பேருந்தில் சென்று கொண்டிருந்த ஈரானின் புரட்சிப் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் 27 பேர் பலியாகினர். அண்மைக்காலங்களில் ஈரான் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT