முகப்பு
உலகம்

இலங்கையில் ஈஸ்டர் தின தாக்குதல்: பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் ஹேமசிறீ கைது

இலங்கையில் ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவத்தில் இலங்கையின் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் ஹேமசிறீ மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா கைது செய்யப்பட்டனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:24 AM
பகிர்:


இலங்கையில் ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவத்தில் இலங்கையின்  பாதுகாப்புத் துறை செயலர் முன்னாள் ஹேமசிறீ மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா கைது செய்யப்பட்டனர்.

தங்களது பணியை சரிவர செய்யத் தவறியதாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அட்டர்னி ஜெனரல் உத்தரவிட்டிருந்ததை அடுத்து, இன்று இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேஷனல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹேமசிறீ பெர்னான்டோவைவும், காவல்துறையினருக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயசுந்தராவையும் இன்று சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

முன்னதாக ஜெயசுந்தராவுக்கு சிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்று விசாரணை நடத்திய சிஐடி அதிகாரிகள், விசாரணையின் முடிவில் அவரைக் கைது செய்தனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெண் உள்பட 9 பயங்கரவாதிகள், தங்களது உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு இந்த தற்தொலைத் தாக்குதலை நிகழ்த்தினர்.

இந்த தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், உள்ளூர் பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது இலங்கை அரசு குற்றம்சாட்டியது. இந்த தாக்குதல் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் வழி ஆசிரியர், பள்ளி முதல்வர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக உளவுத் தகவல்கள் கிடைத்தும், பாதுகாப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள தவறியதற்காக, அந்நாட்டின் காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரவை பணியிடை நீக்கம் செய்தும், பாதுகாப்புத் துறை தலைவர் ஹேமசிறீ பெர்னாண்டோவை பணிநீக்கம் செய்தும் அதிபர் சிறீசேனா உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த மாதம் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போர் கடந்த 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.