கனடா எதிர்க்கட்சியின் வெள்ளைஇனத்தைச் சேராத முதல் தலைவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜக்மீத் சிங், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைக்கான இடைத்தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான, புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் (40) வெற்றி பெற்றார். இந்நிலையில், மக்களவை உறுப்பினராக அவர் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அவர், புதிய ஜனநாயகக் கட்சியின் வெள்ளை இனத்தைச் சேராத முதல் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றவர் ஆவார். ஜக்மீத் சிங், மக்களவைக்குள் நுழையும்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி, அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
பின்னர், தனது உரையைத் தொடங்கிய ஜக்மீத் சிங், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதிகளில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பின்னர், கனடா மக்கள் சந்தித்து வரும் ஏழ்மை பிரச்னைகள் குறித்து, அவர் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, அவருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார்.